கூட்டணியில் குண்டை வீசிய அமைச்சர்... கடுப்பில் முதலமைச்சர்
Recommended Video
சென்னை: விஜயகாந்த் அரசியலுக்கு வந்து என்ன சாதித்துவிட்டார் என அமைச்சர் பாஸ்கரன் பேசியது தேமுதிக முகாமை உஷ்ணமாக்கியதோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் டென்ஷன் ஆக்கியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அமைச்சரின் இந்தப் பேச்சு கூட்டணியில் விரிசலை உண்டாக்கும் வகையில் அமைந்துவிட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றி அமைச்சர் பாஸ்கரன் பேசியதை அறிந்தவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கோபம் அடைந்தாராம்.
சர்ச்சை பேச்சு
கதர் மற்றும் கிராமத்தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் சிவகங்கையில் நேற்று பேசிய போது, நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களால் ஒன்றும் சாதிக்க முடியாது என்றும், விஜயகாந்த் வந்து எதை சாதித்துவிட்டார் எனவும் தெரிவித்திருந்தார். இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிட்டது.
உறுதியளித்த அதிமுக
அமைச்சர் பாஸ்கரன் ஏன் இப்படி பேசினார், ஒருவேளை அவரை தலைமை பேசச்சொல்லியதா என்ற கோணத்தில் கேள்விகள் கேட்டு தேமுதிக எகிறியதாம். இதையடுத்து அதிமுக தரப்பில் இருந்து மூத்த அமைச்சர் ஒருவர் தேமுதிகவை சமாதானம் செய்ததோடு, இனிமேல் இது போன்று நடைபெறாது என உறுதியளித்தாராம். மேலும், பாஸ்கரன் பேச்சையெல்லாம் பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் கூறினாராம்.
தொடர்ந்து சர்ச்சை
அமைச்சர்கள் கருத்துக்கூறுகிறோம் என்ற பெயரில் எதையாவது பேசி, ஆட்சிக்கும், கட்சிக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள் என முதல்வர் தனக்கு நெருக்கமானவர்களிடம் நொந்துகொள்கிறாராம். மேலும், பாஸ்கரனிடமும் தனது கோபத்தை முதல்வர் எடப்பாடி வெளிப்படுத்தினாராம்.
கூட்டணிக்கட்சித் தலைவர்
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக உள்ள நிலையில் கூட்டணிக் கட்சித்தலைவர் என்று கூட பாராமல், விஜயகாந்தை அமைச்சர் பாஸ்கரன் விமர்சித்து இப்போது தலைமையிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார்.