அது என்ன ஆஸ்பத்திரியா.. உல்லாச விடுதியா.. சசிகலா குடும்பம் மீது சி.வி.சண்முகம் பாய்ச்சல்
1 கோடி ரூபாய்க்கு சாப்பிட்டது சசிகலா குடும்பம்தான் என்று அமைச்சர் சண்முகம் கூறியுள்ளார்.
சென்னை: அப்பல்லோ ஆஸ்பத்திரியை உல்லாச விடுதியாக்கி ரூ. 1 கோடிக்கு மேல் தின்று தீர்த்தது சசிகலா குடும்பம்தான், ஜெயலலிதா அல்ல என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
ஆறுமுகசாமி கமிஷனிடம் அப்போலோ நிர்வாகம் ஜெயலலிதா சிகிச்சையின்போது சாப்பிட்டதற்கான பில் தொகையை சில தினங்களுக்கு முன்பு சமர்ப்பித்தது.
இந்த பில் தொகையை பார்த்து இந்திய மக்களே அதிர்ச்சி அடைந்தார்கள். இது சம்பந்தமாக அதிமுக அவைதலைவர் மதுசூதனன் கருத்து சொல்லும்போது, "அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவின் உணவுக்கான செலவு ரூ.ஒன்றரை கோடி என்பது அபத்தமானது.
75 நாட்கள்
ஒன்றரை கோடி ரூபாய்க்கு அவர் உணவு சாப்பிடவில்லை. சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்கள் சாப்பிட்டு இருப்பார்கள், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களும் நான் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றேன். நான் கட்சியின் அவைத் தலைவர். ஆனால் என்னையே ஒரு தடவை கூட ஜெயலலிதாவை பார்க்க சசிகலா அனுமதிக்கவே இல்லை." என்று குற்றஞ்சாட்டி இருந்தார்.
சிவி சண்முகம் கருத்து
இப்போது இதே கருத்தைதான் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகமும் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.வி.சண்முகம் பரபரப்பான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
சசிகலாதான் காரணம்
ஜெயலலிதா உணவு பில் என அப்பல்லோ மருத்துவமனை மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை அவர் வைத்துள்ளார். அதேபோல, இந்த அளவுக்கு பில் வர முக்கியக் காரணமே சசிகலா குடும்பம்தான் என்றும் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து சி.வி.சண்முகம் கூறியுள்ளதாவது:
இட்லி, தோசை
"ஆஸ்பத்திரியை உல்லாச விடுதியாக்கி ரூ.1 கோடிக்கு மேல் இட்லி, தோசை சாப்பிட்டது சசிகலா குடும்பம் தான் .ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எங்கள் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை.
சசிகலா குடும்பம்தான்
மருத்துவமனையில் ரூ 1 கோடிக்கும் மேல் உணவு சாப்பிட்டது யார்? மருத்துவமனையை உல்லாச விடுதியாக்கி தங்கி ரூ.1 கோடிக்கு மேல் இட்லி, தோசை சாப்பிட்டது சசிகலா குடும்பம்தான். சசிகலா தவிர அவரது குடும்பத்தினர் அனைவரையும் ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார்" என்று தெரிவித்துள்ளார்.
பகிரங்க கருத்து
சசிகலா குடும்பம்தான் ஒரு கோடிக்கு சாப்பிட்டிருக்கும் என்று மதுசூதனன் மறைமுகமாகவும், மேலோட்டமாகவும் கருத்து தெரிவித்திருந்தாலும், இன்று அமைச்சர் ஒருவரே சசிகலாவை நேரிடையாகவும், பகிரங்கமாகவும் பெயரை சொல்லி குற்றஞ்சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா மீது அமைச்சரே இப்படி புகார் சொல்லிவிட்டதால், இதன்மூலம் ஆறுமுக சாமி ஆணையத்தின் தரப்பு, சசிகலா குடும்பத்திடம் விசாரணையை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.