தனியார் சட்டக்கல்லூரிகள்... தனியார் முன்வந்தால் தாராளமாக அனுமதி தருவோம் - சி.வி.சண்முகம்
சென்னை: தமிழகத்தில் சட்டக்கல்லூரிகள் அமைக்க தனியார் முன்வந்தால் அரசு தாராளமாக அனுமதி வழங்கும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சட்டக்கல்லூரிகள் இல்லாத மாவட்டத்தில் சட்டக்கல்லூரிகள் அமைக்க விரும்பினால் அனுமதி தர தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.
நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
தமிமுன் அன்சாரி
நாகை மாவட்டத்தில் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தார். அப்போது அது தொடர்பாக பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நாகை மாவட்டத்தில் சட்டக்கல்லூரிகள் அமைப்பது பற்றி அரசு பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தார். மேலும், விரைவில் இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் எனக் கூறினார்.
மாவட்டந்தோறும்
இதனிடையே சட்டக்கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் புதிதாக சட்டக்கல்லூரிகள் அமைக்க தனியார் முன்வந்தால் அனுமதி தர அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரிகள் என்பதை போல் மாவட்டந்தோறும் சட்டக்கல்லூரிகள் என்ற நிலையை உருவாக்கலாம் என்பதை மனதில் கொண்டு அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார்.
தயக்கம் ஏன்?
இதனிடையே தமிழகம் தழுவிய அளவில் தனியார் சட்டக்கல்லூரிகள் எனப் பார்த்தால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே இருக்கின்றன. தனியார் நிறுவனத்தினர் சட்டக்கல்லூரிகள் நிறுவ முன்வராததற்கு காரணம், சட்டக்கல்லூரிகளில் வெடிக்கும் போராட்டங்களும் புரட்சிகளும் தான். இதே ஒரு பொறியியல் கல்லூரியோ, கலை அறிவியல் கல்லூரியோ கட்டினால் கட்டணம் உட்பட அனைத்து விவகாரங்களிலும் நிர்வாகத்தினர் எடுக்கும் முடிவுகளுக்கு ஆட்சேபனை இருக்காது.
எதற்கு வம்பு?
ஆனால் இதே சட்டக்கல்லூரி என்றால் கட்டணம் தொடங்கி பல விவகாரங்களிலும் நிர்வாகத்தினர் மற்றும் மாணவர்கள் இடையே ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உருவாகும். அது போராட்டம் ஆர்ப்பாட்டம் வரை செல்லும். இதனால் தனியார் கல்வி நிறுவனத்தினர் பலரும் எதற்கு வம்பு என அஞ்சி சட்டக்கல்லூரிகள் அமைக்க முன் வருவதில்லை என்பதே கள யதார்த்தம். இந்நிலையில் சட்டக்கல்லூரிகள் அமைக்க தனியார் முன் வந்தால் அனுமதி தர தயார் என அமைச்சர் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.