மேடையில் டென்ஷன்.. சட்டத்துறை செயலருடன் வாக்குவாதம்.. பாதியிலேயே கிளம்பிய சிவி சண்முகம்
சட்டத்துறை செயலருடன் அமைச்சர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
சென்னை: என்ன ஆச்சுன்னே தெரியலை.. அமைச்சர் சிவி சண்முகம் இப்பவெல்லாம் ரொம்பவும் கோபப்படற மாதிரி தெரியுது.. அதிகாரிகளுடன் அடிக்கடி வாக்குவாதத்திலும் ஈடுபட்டு விடுகிறார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழக அமைச்சர்களுக்கும், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இதில் ஒருகட்டத்தில் அமைச்சர் சிவி சண்முகம், சில மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதா சிகிச்சை விஷயத்தை கிளப்பினார்.
அதில், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு சந்தேகத்திற்கு இடமானதே. இந்த விவகாரத்தில் பலர் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட வேண்டும். 75 நாட்களில் ஆஸ்பத்திரியில் என்ன நடந்தது? அங்கு ரூ.1 கோடியே 17 லட்சத்திற்கு இட்லி, தோசை சாப்பிட்டது யார்? நோயாளியை காப்பாற்றுவது முக்கியமா? கௌரவம் முக்கியமா?" என்று கேள்வி எழுப்பினர்.
அமைச்சர் இப்படி பேசியதுமே, அடுத்த கொஞ்சநேரத்திலேயே சுகாதாரத்துறை செயலரான ராதாகிருஷ்ணன், முதல்வர் வீட்டுக்கு பதறியடித்து ஓடிச்சென்று சந்தித்து பேசிவிட்டு வந்தார். இதுபோலவே இப்பவும்கூட ஒரு விவகாரம் வெடித்துள்ளது. சட்டத்துறை செயலர் பூவலிங்கத்துடன், சிவி சண்முகம் வாக்குவாதம் செய்திருக்கிறார்.
கிரீன்வேஸ் சாலையில் அம்பேத்கர் சட்ட பல்கலை. வளாகத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு மற்றும் சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவுக்கு சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் வந்திருக்கிறார்.. என்ன ஆச்சோ தெரியவில்லை.
பூவலிங்கத்துடன் என்ன தகராறோ புரியவில்லை.. மாணவர்கள் அத்தனை பேர் இருக்க.. கவுன்சிலிங்கில் திடீரென லடாய் ஏற்பட்டதாகவும், அமைச்சர் ஏதோ வாக்குவாதம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த கடுப்பில், மாணவர்களை கூட வாழ்த்தி பேசாமல் மேடையில் இருந்து, கோபித்துக்கொண்டு எழுந்து சென்றுவிட்டாராம் அமைச்சர் சிவி சண்முகம்... என்னவா இருக்கும்னு தெரியலையே!