ராமதாஸ் விருந்தில் நானா.. நெவர்.. அதிரடியாக நிராகரித்த அமைச்சர் சி.வி.சண்முகம்
சென்னை: முதல்வருக்கு டாக்டர் ராமதாஸ் தரும் விருந்தில் கலந்து கொள்ள போவதில்லை என்று தமிழக அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளாராம்!
ஆளுங்கட்சியினர் எந்தமேடையில் பேசினாலும் வார்த்தைக்கு வார்த்தை முதல்வர் பெயரை சொல்வது என்பது தமிழக அரசியலில் சாதாரண நிகழ்வு.
ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் திண்டிவனத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய அமைச்சர் சிவி சண்முகம், முதலமைச்சர் பெயரை ஒருமுறைகூட உச்சரிக்கவில்லை என்று சொல்லப்பட்டது. இதைதவிர முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வந்தன.
சர்ச்சைக்குரிய கேள்விகள்
இந்நிலையில்தான், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை ஏன் செய்யவில்லை? செய்ய வேண்டாம் என சொன்னது யார்? முறையான மருத்துவ சிகிச்சை அளித்திருந்தால் ஜெயலலிதா உயிரோடு இருந்திருப்பார் என்று பகீர் கிளப்பினார்.
ராதாகிருஷ்ணன் பதட்டம்
அமைச்சர் இப்படி சொன்னதுமே பெரும் பரபரப்பானது. ஓடோடி போய் முதல்வரை சந்தித்து விட்டு வந்தார் முன்னாள் சுகாதாரததுறை செயலாளர் ராதாகிருஷ்ணன். தமிழக அரசுக்கு எந்தவிதமான சிக்கலை இது உண்டு பண்ண போகிறதோ என்ற கேள்வி அப்போதே எழுந்தது.
முதல்வருக்கு ராமதாஸ் விருந்து
சமீப காலமாக அதிமுக தரப்பில் நிறைய பேட்டிகளும் சிவி சண்முகம் பற்றி வராமலேயே இருந்தது. இந்நிலையில் அதிமுக-பாமக இடையே கூட்டணி முடிவாகி உள்ளது. ஏகப்பட்ட சந்தோஷத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ், முதல்வருக்கு விருந்து தர போவதாக சொல்லி இருக்கிறார்.
சி.வி. சண்முகம் மறுப்பு
ஆனால் இந்த விருந்தில் கலந்து கொள்ள போவதில்லை என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி வேண்டாம் என்று அமைச்சர் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வந்தாராம். ஏற்கனவே பாமகவை கடுமையாக விமர்சித்தவர் சிவி சண்முகம். கடந்த அக்டோபர் மாதம் உளுந்தூர்பேட்டையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசும்போது கூட ஊழல் பற்றி பேச பாமகவினருக்கு தகுதி இல்லை என்றும் அவர்கள் மீதும் குற்றச்சாட்டு உள்ளது என்றும் கடுமையாக குற்றஞ்சாட்டி இருந்தார்.
முதல்வர் மீது அதிருப்தி
ஆனால் இப்போது அதையும் மீறி கூட்டணி முடிந்துவிட்டதால், அமைச்சர் அதிருபதியில் உள்ளதாகவும், அதனால்தான் முதல்வருக்கு தரும் விருந்தில் கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. விழுப்புரம் மாவட்ட எல்லையில் தமிழக முதல்வர் வரும் சமயத்தில், அவரை வரவேற்க மட்டும் சி.வி.சண்முகம் திட்டமிட்டுள்ளாராம்.