திண்டுக்கல்லாரின் காலை கடித்த "செருப்பு".. சொந்த பேரனாவே இருந்தாலும் அப்படி செய்திருக்க கூடாதே!
Recommended Video
சென்னை: என்னதான் நீண்ட விளக்கத்தினை வழக்கமான யதார்த்த பேச்சுடன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தந்திருந்தாலும்.. முதுமையை காரணமாக காட்டி சக அமைச்சர் அவருக்கு சப்போர்ட்டுக்கு வந்தாலும்.. எதுவுமே நம் மனசில் ஒட்ட மறுக்கிறது.. அதே நேரம் நடந்த சம்பவம் சட்டென அகலவும் மறுக்கிறது!
நீலகிரியில் விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.. வரும் வழியில் விநாயகர் கோயிலில் சாமி கும்பிட அமைச்சரை அழைத்துள்ளனர்.. செருப்பு காலோடு உள்ளே போக முடியாமல் நின்ற அமைச்சர், அங்கு விளையாடி கொண்டிருந்த 2 சிறுவர்களில் ஒருவனை அழைத்து, "வாடா.. வாடா.. இங்கே" என்றார்.
ஏதோ படிப்பு பத்திதான் அமைச்சர் கேட்க போகிறார் என சிறுவர்கள் தயங்கி பயந்து நின்றுள்ளனர்... ஆனால் அங்கிருந்த வனத்துறையினர் சிறுவர்களை அமைச்சர்களிடம் அழைத்து வர செய்துள்ளனர்.. அதில் ஒரு சிறுவனிடம், "செருப்பு பக்கிளை கொஞ்சம் கழற்றிவிடு" என்றார் அமைச்சர்.. பிறகு சிறுவன் கீழே அமர்ந்து அமைச்சரின் செருப்பில் இருந்த பக்கிள்ஸை கழட்டி விட்டுள்ளான்.
சர்ச்சை
இதை அங்கிருந்தோர் வீடியோ எடுக்க முயலவும், போலீசார் வீடியோவெல்லாம் எடுக்காதீங்க என்று தடுத்தனர்.. மற்றொரு புறம் குன்னூர் எம்எல்ஏ சாந்திராமு செய்தியாளர்களை படம் எடுக்கவிடாமல் தடுத்தார்... ஆனாலும் விவகாரம் வெடித்து.. நாலாபக்கமும் சிதறி சர்ச்சையானது. அந்த சிறுவன் யானை பாகன் ஒருவரின் மகனாம்.. பழங்குடியினத்தை சேர்ந்தவன் என்பதால் இந்த விஷயம் சீரியஸானது.. பேசுபொருளக உருவெடுத்துள்ளது!
என் பேரன் மாதிரி
"பழங்குடியின சிறுவனை அவமதித்து சாதிய வெறியில் தன்னுடைய செருப்பை கழற்ற சொன்னாரா அமைச்சர்?" என்ற சாட்டையடி கேள்வி எழுந்து வருகிறது... விவகாரம் வெடித்த சில மணி நேரத்திலேயே, "அந்த 2 பேரில் ஒருத்தன் என் பேரன் மாதிரியே.. சின்னப்பிள்ளையா இருந்தான்.. அதனாலதான் கூப்பிட்டு செருப்பு பக்கிகளை கழற்றிவிட சொன்னேன்" என்று அமைச்சர் விளக்கம் தந்தார்.
சமாளிப்பு
ஆனாலும், சமாளிப்புடன்கூடிய இந்த விளக்கத்தை ஏற்க யாருமே தயாராக இல்லை.. காரணம் தன் வீட்டு பேரன் போல இருந்தாலும், அந்த சிறுவனை கூப்பிட்டு அமைச்சர் செருப்பை கழட்ட சொல்லி இருக்கக்கூடாது.. அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் என்றாலும், அவர்களிடம் "ஏண்டா ஸ்கூலுக்கு போகாம இங்க வேடிக்கை பார்த்துட்டிருக்கீங்க.." அப்படின்னு அமைச்சர் கேட்டிருந்தால் அவர் இன்னேரம் கோபுர உயரத்துக்கு உயர்ந்திருப்பார்.
ஜெயக்குமார்
ஒருவேளை தன் வீட்டு பேரனாக இருந்தால் அமைச்சர் இப்படி சொல்லியிருப்பாரா என்பதும் சந்தேகம்தான்.. அமைச்சர் ஜெயக்குமார் சொல்வதைபோல், "அவருக்கு 70 வயசாயிடுச்சு.. அதனால குனிய முடியல" என்ற விளக்கத்தை ஓரளவு ஏற்க முடிந்தாலும், அதற்கும் சிறுவனை அழைத்ததற்கும் சம்மந்தம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. முதுமை பிரச்சனை என்றே வைத்து கொண்டாலும், இந்த காரணம் அமைச்சருடன் இருந்தவர்களுக்கும் கண்டிப்பாக தெரிந்திருக்கவே செய்யும்! அதனால் அவர்கள் கூடி இந்த விஷயத்தில் உதவி செய்திருக்க முடியும்! அல்லது அமைச்சர் கூப்பிட்டதும் சிறுவனை வர வேண்டாம் என்று உடனே தடுத்தி நிறுத்தியிருந்திருக்க முடியும்.
சிக்கல்தான்
அட எதுக்கு இவ்ளோ.. ஒரு ஸ்டூலை கொண்டு வரச் சொல்லி அதில் காலை தூக்கி வைத்து கூட செருப்பை கழட்டியிருக்கலாம்.. அது சாத்தியம்தானே... ஆனால் அப்படிச் செய்யாமல் சட்டென அடுத்தவர் பிள்ளையை அழைத்து செருப்பை கழற்றுடா என்று சொன்னது வருத்தப்பட வைத்துள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் தேவையில்லாத தலைவலிகளில் அதிமுக சிக்கி வருகிறது.. ஏற்கனவே அதிமுக டிஎன்பிஎஸ்சி விவகாரம் வெடித்து வரும்போது, இதெல்லாம் மேலும் மேலும் சிக்கலை தான் தந்து வருகிறது.
ஜெயலலிதா
மறைந்த ஜெயலலிதாகூட தன்னுடைய பொது வாழ்வில் பொது மக்கள் யாரையும், குறிப்பாக சிறுவர்களை செருப்பு, ஷூ கழற்ற சொன்னதே கிடையாது.. அவர்களுக்கு சாப்பாடு போடுவதிலும், படிக்க வைப்பதிலும், விளையாட்டுகளில் சிறந்து விளங்க ஊக்குவிப்பதிலும்தான் அவர் அதிக கவனம் செலுத்துவார். இப்படியெல்லாம் ஒரு போதும் அவர் நடந்து கொண்டதே இல்லை. இதே திண்டுக்கல்லாரின் பெற்ற பிள்ளைகள் மற்றவர்களுக்கு செருப்பை கழட்டி விட முன்வருவார்களா என்று மக்கள் கோபத்துடன் கேட்கின்றனர்.
மனசு வலிக்கிறது
பொதுவாக திண்டுக்கல்லார் மனசில் எதுவும் வைத்துக் கொண்டு பேச மாட்டார்.. வெள்ளந்தியாக பேசிவிடுவார்.. உள்நோக்கம் துளியும் இருக்காது.. அவரது இயல்வே அப்படித்தான்... ஆனாலும் என்னவோ இந்த விஷயத்தை மட்டும் அப்படி நம்மால் பார்க்கவே முடியவில்லை.. அந்த காட்சியை பார்க்கும்போது மனசு வலிக்கிறது.. அதை விட அந்த இடத்தில் கூடியிருந்த அத்தனை பேரும் சிரித்தபடி வேடிக்கை பார்த்ததை, லேசாக எடுத்து கொள்ளவே முடியவில்லை.. மிகப் பெரிய வேதனை இது!