டெய்லி கொலை, கொள்ளை நடக்குது.. அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்.. திண்டுக்கல் சீனிவாசன் செம பதில்!
கொலை கொள்ளை குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்
சென்னை: தமிழகத்தில் நடக்கிற கொலை, கொள்ளைக்கும் அதிமுக ஆட்சிக்கும் என்ன சம்பந்தம் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுவாக மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார் திண்டுக்கல் சீனிவாசன். எதையும் உள்நோக்கத்துடனும், சர்ச்சை தேவை என்பதற்காகவோ பேசமாட்டார்.
வெள்ளந்தி பேச்சுதான் என்றாலும், இவர் வாயை திறந்தாலே அது வைரலாகி விடும் அளவுக்கு சென்று விடுகிறது. இப்போதுகூட சென்னை விமான நிலையத்தில் ஒரு பேட்டி தந்துள்ளார். இதை அமைச்சர் தெரியாமல் சொல்கிறாரா, அல்லது விஷயம் தெரிந்துதான் சொல்கிறாரா என்று தெரியவில்லை.
நகைக்காக நெல்லை திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி நேற்று கொலை செய்யப்பட்டார். அதனால், தொடர்ந்து தமிழகத்தில் நிலவும் கொலை, கொள்ளைகள் பற்றி செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு திண்டுக்கல் சீனிவாசன், "பணத்துக்காக, நகைக்காக இப்படி கொலை, கொள்ளைகள் நடக்குது. இது எல்லா இடங்களிலும்தான் நடக்குது. டெய்லி பேப்பர்ல செய்தி வருது. டிவியிலயும் செய்தி வருது. இதுக்கு நாம என்ன செய்ய முடியும்?
எல்லா ஊரிலும், எல்லா நாட்களிலும் எல்லார் ஆட்சியிலும்தான் நடக்குது. இதையெல்லாம் அவங்கவங்களே பார்த்து திருத்திக்கிட்டாதான் உண்டு. கொலை, கொள்ளைக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம்? இதுக்கு நம்ம என்ன செய்ய முடியும்?" என்றார்.