மிகவும் அபாய கட்டத்தில் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை.. காவேரி மருத்துவமனை
சென்னை: மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்ட தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை அபாய கட்டத்தில் உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக முதல்வரின் தாய் மரணமடைந்ததை அடுத்து முதல்வரை சந்தித்து துக்கம் விசாரிக்க சென்னை நோக்கி கடந்த 13-ஆம் தேதி வந்து கொண்டிருந்தார் தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு.
இந்த நிலையில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மயிலாப்பூர் லஸ் கார்னரில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எக்மோ கருவியும் செயற்கை சுவாசமும் பொருத்தப்பட்டு 24 மணி நேர தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா சோதனை செய்ததில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.
எனினும் அவர் தொடர்ந்து உயிர் காக்கும் கருவிகளின் உதவிகளுடன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் காவேரி மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் துரைக்கண்ணுவின் உடல்நிலை அபாய கட்டத்தில் உள்ளது. உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டும் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை.
உயிர் ஆதார செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது என மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனால் அதிமுகவினர் கலக்கம் அடைந்துள்ளனர்.