அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்?- மருத்துவமனைக்கு அமைச்சர்கள் வருகை
சென்னை: தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அமைச்சர்கள் காவேரி மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் இறந்த தகவலை அறிந்து அவரிடம் நலம் விசாரிப்பதற்காக அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13-ஆம் தேதி காலை சென்னையிலிருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
காலை 10 மணி அளவில் திண்டிவனம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது அமைச்சர் துரைக்கண்ணுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு எக்மோ, செயற்கை சுவாச கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை தொடர்ந்து பின்னடைவு - மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு
அப்போது துரைக்கண்ணுவிற்கு கொரோனா இருப்பதாகவும் அவரது நுரையீரலில் 90 சதவீதம் தொற்று இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து அமைச்சர்கள் தங்கமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர், காமராஜ், வேலுமணி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்கள்.