'அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுவது பொய்.. முடிந்தால் வழக்கு போடவேண்டியதானே'.. முன்னாள் அமைச்சர் சவால்!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் அறிக்கையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்' என தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறிஇருந்தது . அதன்படி திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 5 சவரனுக்குக்கீழ் நகை அடமானம் வைத்தவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அந்தவகையில் ரூ.6,000 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இதற்கிடையே கடந்த அதிமுக ஆட்சியில் நகைக்கடன் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக தி.மு.க அரசு உடனடியாக விசாரணையில் இறங்கியது
கூட்டுறவு வங்கிகளில் நூதன முறைகளில் அடேங்கப்பா! நகை கடன் மோசடி- அமைச்சர் ஐ.பெரியசாமி ஷாக் தகவல்கள்
மெகா முறைகேடுகள்
சங்கங்களின் பெயர், பயனாளியின் பெயர், நகைக்கடன் பெற்ற நாள், கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண் உள்பட பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.அப்போது கவரிங் நகைகளுக்குக் கடன், வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களின் பெயர்களில் கிலோ கணக்கில் நகைகள் அடமானம் வைத்திருத்தல் தெரிந்தது.
அதிர்ச்சியில் அதிகாரிகள்
ஒரே ஆதார் எண்ணுக்கு அதிகக் கடன்கள் என்று பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது அம்பலமானதால் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்பத்தியது. சில கூட்டுறவு வங்கிகளில் நகை அடமானம் வைக்கப்பட்ட பொட்டலங்கள் நகை இல்லாமல் வெறுமனே இருந்தது கண்டு கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
நகை பொட்டலங்களே இல்லை
ஒரு சிலர் ஒரே பெயரில் அதிக அளவிலான கடன்கள் வாங்கியதும் தெரியவந்தது. மோசடி செய்து நகைக்கடன் பெற்றவர்களின் நகைக்கடன்களை பறிமுதல் செய்ய அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மெகா மோசடி தொடர்பாக பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ''தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. குரும்பூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் 2 கோடி மதிப்புள்ள 247 நகை பொட்டலங்களே இல்லை.
பாரபட்சமின்றி நடவடிக்கை
வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களின் பெயர்களில் பல கோடி ரூபாய்கள் மோசடி நடைபெற்றுள்ளது. வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களிடம் கிலோ கணக்கில் தங்கம் இருக்குமா? நகை அடகுக்கடை நடத்துகிறவர்களும், தங்களிடம் அடமானத்துக்காக வந்த நகைகளை கூட்டுறவு கடன் சங்கத்தில் கொடுத்து பணம் பெற்றுள்ளனர்.சில நபர்கள் 100, 200, 300 கடன்கள் என வாங்கியுள்ளனர். கவரிங் நகைகளுக்கும் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
எல்லாம் பொய்
இந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் கருத்துக்கு முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் பதில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'கூட்டுறவு சங்க நகை கடன் பெற்றதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி உண்மைக்கு மாறான தகவல்களை கூறுகிறார். தன்னிச்சையாக கூட்டுறவு சங்க நிர்வாகிகள் எந்தக் கடனையும் வழங்க முடியாது. முறைகேடு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே' என்று அவர் சவால் விடுத்துள்ளார்.