கல்லெடுத்து அடிக்க நினைத்தால் காயப்பட்டு கொள்வீர்கள்.. ரஜினிக்கு ஜெயக்குமார் அட்வைஸ்
சென்னை: தமிழக அரசு மீது கல்லெடுத்து அடிக்க நினைத்தால் காயப்படுவீர்கள் என ரஜினிகாந்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் சினிமாவுக்கு வந்து 60 ஆண்டுகள் ஆன நிலையில் அதை கொண்டாடும் வகையில் உங்கள் நான் என்ற நிகழ்ச்சி நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில் எடப்பாடி முதல்வராவார் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டோம். ஆனால் அதிசயம் நடந்தது. தமிழக அரசு இப்போது கவிழ்ந்து விடும் , அப்போது கவிழ்ந்துவிடும் என்றார்கள். அதுவும் 99 சதவீதம் பேர் இதைத்தான் சொன்னார்கள். ஆனால் அதிசயம் அற்புதம் நடந்தது.
துணை முதல்வர் கண்டனம்
தடைகளை தாண்டி இந்த அரசு நீடித்து கொண்டிருக்கிறது. அது போல் அதிசயம் இன்றும் நடக்கிறது. நாளையும் நடக்கும் என்றார். ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு துணை முதல்வர், தமிழக அமைச்சர்கள் என கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நமது அம்மா கண்டனம்
இந்த நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் ரஜினியை விமர்சித்து கட்டுரை தீட்டப்பட்டுள்ளது. ஆச்சரியம் பூச்சொரியும் எடப்பாடியும் சூசக சூப்பர் ஸ்டார் ஆருடமும் என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி
அதில் பேருந்து நடத்துநராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினியும் தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ஆவோம் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். சினிமா வாய்ப்பு வரும் முன்பே முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி ஒரு ரியல் தலைவர் என்பதை வரலாறு உணர்த்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டக்டர் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் நினைத்திருக்க மாட்டார்.. நமது அம்மா பதிலடி!
தமிழக அரசு
இந்த நிலையில் ரஜினியின் கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தி நகரில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழக அரசு மீது கல் எறிய நினைத்தால் காயப்படுவீர்கள். எங்கள் மீது கல் எறிந்து காயப்பட்டு கொள்ளாதீர்கள்.
ரஜினி சொல்லும் அதிசயம்
ஜெயலலிதா இல்லாத சூழலில் அதிசயம் நடந்தது. ரஜினி சொல்லும் அதிசயம் தமிழக அரசியலில் நடக்காது. நடிகர்களாக இருந்தாலும் யாராக இருந்தாலு்ம உங்கள் கொள்கையை சொல்லுங்கள். உள்ளாட்சி தேர்தலிலும், 2021 சட்டசபை தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று அதிசயம் நிகழ்த்தும். ஜெ. மறைவுக்கு பின்னர் கட்சி, ஆட்சி நீடிக்குமா என்ற கேள்விகளை கடந்து இரண்டும் நீடிக்கிறது என்றார் ஜெயக்குமார்.