நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா... சொல்லுங்கள்... திமுகவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
சென்னை: அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பணி நியமனங்கள் பற்றி சிபிஐ விசாரணை கோருவதற்கு முன்னர் நீங்கள் அத்தனைபேரும் உத்தமரா என்பதை சிந்திக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சிந்தனை சிற்பி சிங்காரவேலனின் 161-வது பிறந்தநாள் நிகழ்ச்சி அரசு விழாவாக நடைபெற்ற நிலையில் அதில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு மரியாதை செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட நபர்களை தேடி தேடி கைது செய்யப்பட்டு வருவதாகவும், எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் கைது நடவடிக்கை தொடரும் எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சிபிஐ விசாரணை
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 3 தீர்மானங்களில், அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த பணிநியமனங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்பதும் ஒன்றாகும். ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் அரசு பணிநியமனம் பற்றி விசாரிக்க வேண்டும் என திமுக வலியுறுத்த தொடங்கியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது, முதலில் நீங்கள் அனைவரும் உத்தமர்தானா என்பதை சொல்லுங்கள், அதற்கு பிறகு சிபிஐ விசாரணை கேட்கலாம் என திமுகவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி தந்தார்.
கையெழுத்து
திமுக ஆட்சியின் போது கடந்த 2006-2011 காலகட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி சேர்மனாக இருந்த செல்லமுத்து பல முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அப்போதைய திமுக அமைச்சர்கள் கொடுத்த கடிதங்கள் கைப்பற்றப்பட்டு அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாகவும் கூறினார். முன்னாள் அமைசர்கள் கே.என்.நேரு, வீரபாண்டி ஆறுமுகம்(மறைந்துவிட்டார்), அந்தியூர் செல்வராஜ், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமரமூர்த்தி போன்றோர் கையெழுத்திட்டு கொடுத்துள்ள கடிதங்கள் பற்றியெல்லாம் விரைவில் முழு உண்மை தெரியவரும் எனக் கூறினார்.
நடவடிக்கை
ஆனால் இப்போது தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய நபர்கள் பாரபட்சமின்றி கைது செய்யப்பட்டு வருவதாகவும், அதில் எந்த சமரசமும் இல்லாமல் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். திமுக ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருந்துகொண்டு எங்களை பற்றி குறைகூற எந்த தகுதியும் இல்லை என சாடினார். திமுக ஆட்சியில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தொடர்புடையவர்கள் விரைவில் சிறைக்கு செல்லும் நிலை ஏற்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
குற்றச்சாட்டு
அதிமுக அரசு என்பதால் தான் தேர்வு முறைகேடு விவகாரத்தில் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதே திமுக ஆட்சி என்றால் அப்படியே மூடி மறைத்திருப்பார்கள் எனவும் தெரிவித்தர். காங்கிரஸ் -திமுக கூட்டணி தான் என்.பி.ஆரை கொண்டு வந்ததே என்றும், இப்போது அதை எதிர்த்து ஒத்துழையாம இயக்கம் என்பது ஏமாற்று வேலை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் சாடினார்.