சசிகலாவுக்கு ஜால்ரா அடிப்பதை ஏற்க முடியாது.. கோகுல இந்திராவுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஜெயக்குமார்.!
சென்னை: அதிமுகவில் இருந்துகொண்டு சசிகலாவுக்கு ஜால்ரா அடிப்பதை ஏற்க முடியாது என எச்சரித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
சசிகலா தவ வாழ்க்கை வாழ்ந்தவர் என முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கருத்து தெரிவித்திருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும், ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைப்பது நல்லதல்ல எனக் கூறி கோகுல இந்திராவை சூசகமாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சசிகலா குறித்து
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திரா, சசிகலா தவ வாழ்க்கை வாழ்ந்தவர் என்றும் அவரை பற்றி தவறாக பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் கூறியிருந்தார். அப்போதே இந்தக் கருத்து அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதினர்.
ஜெயக்குமார் பதிலடி
அவர்கள் கருதியதை போலவே கோகுல இந்திராவின் கருத்து அதிமுகவில் புயலைக் கிளப்பியுள்ளது. சசிகலா இன்னும் ஓரிரு வாரங்களில் விடுதலையாக உள்ள சூழலில் அவரை புகழ்ந்து கோகுல இந்திரா பேசியிருப்பது அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தாமல் இல்லை. இந்நிலையில் இந்தக் கருத்து குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மிக கடுமையாக பதில் கொடுத்தார் அமைச்சர் ஜெயக்குமார்.
ஒரே மந்திரி சபை
கோகுல இந்திரா உட்பட யாராக இருந்தாலும் சரி கட்சிக்குள் இருந்து கொண்டு சசிகலாவுக்கு ஜால்ரா அடிப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது என்றும் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைப்பது நல்லதல்ல எனவும் எச்சரிக்கை விடுத்தார். ஜெயக்குமாரும், கோகுல இந்திராவும் ஒரே மந்திரி சபையில் அமைச்சர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயக்குமாரின் இந்த கடுமையான பதிலடிக்கு கோகுல இந்திரா எதிர்வினையாற்றுவதை பொறுத்து இந்த விவகாரம் அமையும்.
ஜெயக்குமார் பேட்டி
இதனிடையே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுக-அமமுக இடையே ஏற்பட்டுள்ள பிணக்கு அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள சண்டை போன்று தான் என்று வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியை சுட்டிக்காட்டிய அமைச்சர் ஜெயக்குமார், ராஜேந்திரபாலாஜி புரிதலின்றி பேசி வருவதாகவும், அதிமுக-அமமுக இணைப்பு குறித்து அவர் கூறிய கருத்தை துளியும் ஏற்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.