கழுவுற மீனில் நழுவுற மீன் தான் நடிகர் ரஜினிகாந்த்.. அமைச்சர் ஜெயக்குமார்
ரஜினியின் கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை: சபரிமலை விவகாரத்தில் ரஜினியின் கருத்து தெளிவின்மையைதான் காட்டுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சபரிமலை விவகாரம் குறித்த தீர்ப்பு பற்றி நடிகர் ரஜினிகாந்த் நேற்று கருத்து தெரிவித்திருந்தார். அப்போது "உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். அதேநேரத்தில் மக்களின ஐதீகங்களில் மற்றவர்கள் தலையிடக் கூடாது" என்று சொன்னார்.
லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் திமுக.. பொறுப்பாளர்கள் நியமனம்.. அடேங்கப்பா வியூகம் வகுக்கும் ஸ்டாலின்
தெளிவில்லாத பதில்
இந்நிலையில் சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் நடிகர் ரஜினிகாந்த் கூறியது குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், ரஜினியின் தெளிவின்மையை தான் இந்த பேச்சு எடுத்து காட்டுகிறது. எந்த கருத்தாக இருந்தாலும் ஆணித் தரமாக சொல்ல வேண்டும். அப்படி ஆணித்தரமாக கருத்தை சொல்பவர்களைதான் தலைவனாக ஏற்று கொள்ள முடியும்.
கழுகிற மீனில்...
கழுவுகிற தண்ணீரில் நழுவுகிற மீனைப்போல இருக்க கூடாது. இது தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியும். யார் என்ன மாதிரி கருத்தை தெரிவிக்கிறார்? யார் நழுவுகிறார்? என்பது மக்களுக்கு தெரியும்.
அரசியல் தலையீடு கூடாது
அப்படிப்பட்டவர்களை நழுவ விட்டு விட வேண்டும் என்று மக்களுக்கு தெரியும். என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் மத விஷயங்களில் அரசியல் கட்சிகள் தலையிடாமல் இருப்பதுதான் சரி. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
தேர்தல் பொறுப்பாளர்கள்
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், தேவைப்படும்போது அதிமுக.,விற்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர் என்றும் கூறினார்.