எடுத்தோம் கவிழ்த்தோம்ணு செஞ்சுட முடியாது, '3 எம்எல்ஏக்கள்' நோட்டீஸ் பற்றி ஜெயக்குமார் அடடே விளக்கம்
சென்னை: உரிய தருணம் வந்ததால்தான் ஓன்றரை வருடங்கள் கழித்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3பேருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், "முகாந்திரம் இருக்கும் பட்சத்தில், 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திட்டதட்ட ஒன்றறை வருடங்கள், ஆதாரங்களாக வீடியோ கலெக்சன்கள், ஆடியோ கலெக்சன்கள் எடுத்து சபாநாயகரிடம் கொறடா கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் மூன்று எம்எல்ஏக்களுக்கு (கலைச்செல்வன், பிரபு, ரத்தினசபாபதி) விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
சபாநாயகர் எனக்கு நோட்டீஸ் அனுப்பாதது ஏன்.. வான்டட்டாக வம்பிழுக்கும் கருணாஸ்
இந்தியாவில் கட்சி தாவல் தடை சட்டப்படி, கட்சிக்கு எதிராகவும், ஆட்சிக்கு எதிராகவும் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே அந்த அடிப்படையில் கொறடா புகார் கொடுத்துள்ளார். இது குறித்து பேரவை தலைவரின் அதிகாரத்துக்கு உள்பட்டு வருவதால், நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது என்றார்,
நீண்ட நாள்களுக்கு முன்பு அமமுகவுடன் இருந்தததாக கூறப்படும் விவகாரத்தில் இப்போது ஏன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், "உடனே எடுத்தோம் கழித்தோம் என்று எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அதற்கு என்று உரிய தருணம் இருக்கிறது.
உரிய தருணம் என்றால் எல்லாவிதமான ஆதாரங்களும் வேண்டும். அப்படி ஆதாரங்களை சேகரித்த பின்பு தான் கொறடா புகார் கொடுத்ததாக கூறியிருக்கிறார். எனவே எடுத்தோம் கவிழ்த்தோம் என நடவடிக்கை கூடாது என்பதால்தான் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 3பேரும் விளக்கம் அளித்த பிறகு சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார்" இவ்வாறு கூறினார்.