ஓட்டுநர் ராஜேஷுக்கு ஐ.நா.வில் சிலை வைக்க போவதில்லை.. 365 நாளும் அழ போவதுமில்லை.. அமைச்சர் சர்ச்சை
Recommended Video
சென்னை: ஓட்டுநர் ராஜேஷுக்கு ஐ.நா.வில் சிலை வைக்க போவதில்லை என்றும் 365 நாட்களும் அவரை நினைத்து யாரும் அழுது கொண்டிருப்பதில்லை என்றும் அமைச்சர் சர்ச்சையாக பேசியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (25). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் கம்மவர்பாளையம் பகுதியில் தங்கி சென்னையில் தனியார் நிறுவனத்தில் கால் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 25-ஆம் தேதி மறைமலைநகர் சிங்கபெருமாள் கோயில் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து அவரது செல்போனில் ஒரு வீடியோ இருப்பதை உறவினர்கள் கண்டறிந்தனர்.
தற்கொலை
ராஜேஷ் சாவதற்கு முன்னர் வீடியோவில் காரணத்தை சொல்லியுள்ளார். அதில் போக்குவரத்து போலீஸார் தன்னை தரக்குறைவாக திட்டியதால்தான் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
போராட்டம்
ராஜேஷ் சாவுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கால்டாக்சி ஓட்டுநர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் ராஜேஷின் உறவினர்களும் சேர்ந்து, திருமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சரியல்ல
இந்த நிலையில் ராஜேஷ் தற்கொலை குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில், போலீஸ் தரக்குறைவாக பேசியிருந்தால் உயரதிகாரிகளை அணுகி ராஜேஷ் சம்பந்தப்பட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு இப்படி தற்கொலை செய்து கொண்டது சரியல்ல.
சிலை வைக்க போவதில்லை
இதுபோல் தற்கொலை செய்து கொண்டதால் அவரது குடும்பத்துக்குத்தான் இழப்பே தவிர, தற்கொலை செய்து கொண்டதற்காக அவருக்கு ஐ.நா.வில் யாரும் சிலை வைக்கபோவதில்லை.
பரபரப்பு
அது போல் 365 நாட்களுக்கு ராஜேஷை நினைத்து யாரும் அழுது கொண்டிருப்பதில்லை. இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் என்பதை உணர வேண்டும். தற்கொலை என்பது எதற்கும் தீர்வாகாது என்று சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கும் போது கூட கூட்டணி திருப்பங்கள் வரக்கூடும். எல்லா கட்சிகளும் எங்களோடு கூட்டணி வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
ஒரே கட்டம்
தமிழகத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தக் கூடாது. ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். திமுக ஒரு தீயசக்தி என்று எம்.ஜி.ஆர் அடையாளம் காட்டினார். அதனால் திமுக எங்கள் எதிரி, அமமுக, திமுக தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் கூட்டணி குறித்து பேசினாலும் அதற்கு அதிமுக தயாராக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பி.எஸ் மகன் விருப்ப மனு வாங்கியதில் தவறில்லை. அடித்தட்டு மக்கள், ஆதிதிராவிடர், பின் தங்கியவர்கள் சமூகநிலை, பொருளாதார முன்னேற்றம் போன்றவைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நிதி நிலை அறிக்கை இருக்கும் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.