வயசாயிடுச்சு.. கீழே குனிய முடியல.. அதனாலதான்.. திண்டுக்கல்லாருக்கு சப்போர்ட்டுக்கு வந்த ஜெயக்குமார்!
திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை குறித்து ஜெயக்குமார் விளக்கம் தந்துள்ளார்
சென்னை: "அவருக்கு வயசாயிடுச்சு.. வயது முதிர்வின் காரணமாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனால் குனிய முடியவில்லை.. அதனாலதான் அந்த சிறுவனை அழைத்து தன்னுடைய செருப்பை கழட்ட சொல்லி உள்ளார்" என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
நீலகிரியில் முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் புத்துணர்வு முகாம் துவக்க விழா இன்று நடைபெற்றது.. இந்த விழாவை துவக்கி வைக்க அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வந்திருந்தார்.
பக்கத்திலுள்ள விநாயகர் கோயிலுக்குள் சாமி கும்பிட சென்றுள்ளார்.. அப்போது காலில் செருப்பு இருந்ததால், அப்படியே உள்ளே போக முடியவில்லை.. அதனால் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர்களில் ஒரு சிறுவனை அழைத்து "வாடா.. வாடா.. இந்த செருப்பு பக்கிளை கழட்டி விடுடா" என்று சொன்னார்.
சிறுவனும் கீழே குனிந்து அமைச்சரின் செருப்பை கழட்டவும், இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்தனர்.. ஆனால் போட்டோ, வீடியோ எதுவும் எடுக்கக்கூடாது என்று அங்கிருந்த போலீசாரும் தடுத்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தி.. மிகப்பெரிய விவாத பொருளாகவும் உருவாகி உள்ளது.
"அந்த 2 பேரில் ஒருத்தன் என் பேரன் மாதிரியே.. சின்னப்பிள்ளையா இருந்தான்.. அதனாலதான் கூப்பிட்டு செருப்பு பக்கிகளை கழற்றிவிட சொன்னேன். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை" என்று அமைச்சர் விளக்கம் அளித்திருந்தார். எனினும் அமைச்சரின் விளக்கத்தை பலர் ஏற்றுகொள்ளவில்லை.. குழந்தைகள் நல ஆர்வலர்கள் கொதித்து போய் உள்ளனர்..
"வாடா.. வாடா.. செருப்பை கழட்டி விடுடா" திண்டுக்கல் சீனிவாசன் மீது மேலூர் போலீசில் திகவினர் புகார்
இதில், திகவினர் அமைச்சர் மீது நடவடிக்கை கோரி பல போலீஸ் ஸ்டேஷன்களுக்கு புகார் கொடுக்க சென்றுவிட்டனர். இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தன் சார்பில் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னதாவது:
"அவருக்கு வயசு 70-க்கு மேல ஆயிடுச்சு.. போற வழியில் செடி, கொடிகள் அவருடைய காலில் சிக்கிக்கொண்டன... வயசு ஆயிடுச்சு இல்லையா? வயது முதிர்வின் காரணமாக அவரால் கீழே குனிய முடியவில்லை.. அதனாலதான் சிறுவனை அழைத்து செருப்பை கழட்ட சொல்லியிருக்கிறார். இதுல எந்த உள்நோக்கமும் இல்லை.. முதுமையில் எல்லோருக்கும் வரும் சிரமங்கள்தான் அவருக்கும் வந்திருக்கிறது. இதை பெரிசுபடுத்த வேண்டாம்" என்றார்.