பழுத்த மரமென்றால் கல்லடி படலாம்.. ஆனால் மரம் பட்டு போய் விடக் கூடாது... உணருமா அதிமுக?
நடிகர் விஜய் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி தந்துள்ளார்
சென்னை: ஒரு படம் ஓடவேண்டும் என்பதற்காக தங்களை தாக்குவதாகவும், அதிமுக பழுத்த மரம் என்பதால் கல்லடி படுவதாகவும், நடிகர் விஜய் விமர்சனம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
உண்மையிலேயே அமைச்சர் சொல்வது போல, அதிமுக பழுத்த மரமா? ஜெயலலிதா மறையும்வரை அப்படித்தான் இருந்தது. இப்போது இல்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்து!
எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற இரு மாபெரும் தலைமைகளின் உழைப்பு தியாகத்தால் வளர்ந்து விருட்சமான கட்சி அதிமுக. ஆனால், இன்று அந்த கட்சி அதன் கட்டுக்கோப்பை இழந்துள்ளது என்பதும் ஒரு சில செயல்பாடுகளினால் மக்களின் அதிருப்திகளுக்கு உள்ளாகி வருகிறது என்பதையும் மறுக்க முடியாது.
2 தொகுதிகளிலும் வெற்றிக் கனி.. உதயநிதி ஸ்டாலினை களத்தில் இறக்கி.. திமுக போடுமா அதிரடி பிளான்
சலசலப்புகள்
பழுத்த மரம் என்றால், அதிமுவுக்குள் சலசலப்புகள், முணுமுணுப்புகள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? அல்லது ஒற்றை தலைமை என்ற ஒரு விவகாரமே கட்சிக்குள் எழவே இல்லை என்று ஒதுக்கிவிட முடியுமா என தெரியவில்லை. நிறைய பிரச்சினைகளுக்கு அதிமுக மெளனத்தையே பதிலாக கொடுத்து வருகிறது.
ஆதங்கம்
பாஜகவின் அறிவிப்புகளுக்கு தன்னுடைய ஆழமான எதிர்ப்பையும், பலமான கண்டனத்தையும் இதுவரை அதிமுகவால் அதிரடியாக வெளிப்படுத்த முடியாத நிலை உள்ளதை மக்கள் கண்கூடாக பார்த்து வருகிறார்கள். அதிமுக என்ற ஆளுமையை கட்டி ஆளும் திறன் மிக்க ஒரு தலைமை இல்லையே என்ற அக்கட்சி தொண்டர்களே ஆதங்கப்படுகின்றனர்.
எளிமை முதல்வர்
மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பல திட்டங்கள் தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மறுக்க முடியாததே. அதேபோல, எளிமையான முதல்வர் என்ற பெயரை பெற்றுள்ளதும் மறுக்க முடியாத உண்மையே. ஆனால், ஊழல் புரிந்ததாக சொல்லப்பட்ட அமைச்சர்கள் மீதும், புகார் எழுந்த முக்கிய நிர்வாகிகள் மீதும் என்ன நடவடிக்கை இதுவரை கட்சி சார்பாக எடுக்கப்பட்டுள்ளது என்பது கேள்விக்குறிதான்.
சுபஸ்ரீ
அதேபோல பேனர் விழுந்து இறந்த சம்பவத்தில் சுபஸ்ரீ வீட்டுக்குப் போய் அதிமுக தரப்பில் யாருமே இதுவரை ஆறுதல் சொல்லவில்லை. இதை அதிமுக முதலில் செய்திருக்க வேண்டாமா.. அந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் இதுவரை கைதாகவில்லை. ஜெயலலிதா இருந்திருந்தால் அந்த நபர் இந்நேரம் புழல் சிறையில் இருந்திருப்பாரா மாட்டாரா.. இதெல்லாம்தான் அதிமுக மீது மக்கள் அதிருப்தி அதிகரிக்க முக்கியக் காரணம்.
எதிர்பார்ப்பு
அரிசியில் கல் இருக்கலாம்.. ஆனால் கல்லில் அரிசி இருக்கக்கூடாது.. என்பதைதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதே அடிப்படை உண்மை. அதிமுக என்ற பழுத்த மரம், கல்லடி பட்டு அல்ல.. தானே பட்டு போய் விழுந்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!