என்ன சொன்னாலும் சரி.. நாங்க சந்தனம்.. சந்தனம் தான்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜெயக்குமார் பதிலடி
சென்னை:அதிமுகவின் மெகா கூட்டணிக்குள் சிண்டு முடியும் எதிர்க்கட்சிகளின் வேலை பலிக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் கோயம்பேடு பகுதியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியானது லோக்சபா தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். இந்த மெகா கூட்டணிக்குள் சிண்டு முடியும் எதிர்க்கட்சிகளின் வேலை பலிக்காது.
கொள்கை முரண்பாடுகள்
எங்களின் கூட்டணிக்குள் கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருக்கலாம். ஆனாலும் ஒன்றாக தேர்தலை சந்திக்கிறோம்.
ஸ்டாலின் நினைக்கிறார்
லோக்சபா தேர்தலில் மிக பெரிய வெற்றி பெறலாம் என்று ஸ்டாலின் நினைக்கிறார். சுலபமாக ஜெயிக்கலாம் என்று நினைக்கிறார். அதெல்லாம் நடக்காது.
மக்களுக்கு தெரியும்
பாஜகவுடனான கூட்டணி குறித்து திமுக தரப்பு பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கிறது. ஈழ படுகொலைக்கு யார் காரணம்... ராஜபக்சேவிடம் பரிசு பொருட்களை வாங்கியது யார் என்று எங்களுக்கு தெரியும்.
அதிமுக கூட்டணி வெற்றி
தமிழகத்தில் நடப்பது என்ன என்று மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே... அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.
கூட்டணி பாதிக்காது
தேமுதிக பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது அவரின் கருத்து. அதனால் தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை எந்த விதத்திலும் பாதிக்காது.
நாங்கள் சந்தனம்
பாஜக, பாமக, அதிமுக கூட்டணி குறித்து யார் என்ன சொன்னாலும் நாங்க சந்தனம்.. சந்தனம் தான். அது பற்றி விளக்க வேண்டியது இல்லை என்று ஜெயக்குமார் கூறினார்.