மிட்டா மிராசுகளுக்கு தான் காங்கிரஸ் சீட் கொடுக்கும்... அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
சென்னை: காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட மிட்டா மிராசுகளுக்கு மட்டுமே சீட் வழங்கப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
நாங்குநேரி இடைத்தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசித்துவிட்டு சென்னை திரும்புவதற்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அந்தக்காலம் தொடங்கி இந்தக்காலம் வரை வசதி படைத்தவர்களுக்கும், பெரும் நிலச்சுவான்தாரர்களுக்கும் மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு வருவதாகவும், அதிமுகவில் மட்டுமே ஏழை எளிய கடைக்கோடி தொண்டன் கூட எம்.எல்.ஏ.வாகவோ, அமைச்சராகவோ வர முடியும் எனவும் கூறியுள்ளார்.
கோடீஸ்வரர் என்பதற்காக மட்டுமே ரூபி மனோகரனுக்கு நாங்குநேரியில் போட்டியிட காங்கிரஸ் சீட் அளித்துள்ளதாக கூறிய ஜெயக்குமார், அதிமுக மட்டுமே அண்ணாவின் வழியை கடைப்பிடித்து எளியவர்களையும் அரசியலில் ஏற்றிவிடும் ஏணியாக உள்ளதாக தெரிவித்தார். மேலும், கட்சிக்கு பாடுபட்ட அடிமட்ட தொண்டன் கூட உயர்பதவிகளுக்கு வருவது அதிமுகவில் மட்டுமே சாத்தியம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்..
கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் திமுகவின் போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், இப்போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் திமுகவின் பொய் பரப்புரை இடைத்தேர்தலில் மக்களிடம் எடுபடாது எனவும் கூறினார். நடைபெறும் இடைத்தேர்தலாக இருந்தாலும் சரி, அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி அதிமுக தான் வெற்றிபெறும் என ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் பெயரை ரூபி வெங்கடேசன் என மறந்தவாறு அவர் பேட்டியில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.