கொரோனா உயிரிழப்பு விஷயத்தில் மறைக்கிறோமா.. அதெல்லாம் அவசியமே இல்லை.. அமைச்சர்
சென்னை: கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். மருத்துவ முகாமிற்கு சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகளை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.
இந்த நிகழ்வுக்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இதனால்தான் இங்கு நோய் தொற்று படிப்படியாக குறைந்துள்ளது.
மெடிக்கல் எமர்ஜென்சி.. தேனாம்பேட்டை டூ கேளம்பாக்கம்.. பண்ணை வீடு செல்ல இ - பாஸ் எடுத்த ரஜினிகாந்த்!
மறைக்க வேண்டிய அவசியம்
சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் தினமும் 500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் புதிதாக தொற்றுக்கு ஆளாபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா நோய் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசிற்கு இல்லை.
நடவடிக்கை
ஒருவர் உயிரிழந்த பிறகு அவர் என்ன காரணத்தால் உயிரிழந்தார் என்பதை கண்டறிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்த நடைமுறையால் சில மரணங்கள் விடுபட்டு விட்டது. சமூகவலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இ பாஸ்
நடிகர் ரஜினிகாந்த் இ பாஸ் பெற்று பயணம் சென்றாரா என்பது ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் அளிக்கப்படும். தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணி சுமுகமாக இருக்கிறது. கூட்டணியில் தற்போது வரை எந்த இடையூறும் இல்லை. தமிழகத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக அதிமுக செயல்படாது என ஜெயக்குமார் தெரிவித்தார்.
விமர்சனம்
மார்ச் 1-ம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை இறந்தவர்களின் எண்ணிக்கையில் 444 மரணங்கள் விடுபட்டுவிட்டதாகவும் அவற்றை நேற்றைய கணக்கில் சேர்த்துவிட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஸ்டாலின் கொரோனா மரணத்திலும் பொய் கணக்கு எழுதிய கொடூரமான ஆட்சி என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.