அம்மிக்கல்லோடு அம்மா ஆட்சியும் பறந்துவிடும்.. எப்போதும் மம்மி ஆட்சிதான்.. பேரவையில் "ரைமிங்" விவாதம்
சென்னை: ஆடிக்காற்றில் அம்மிக்கல்லோடு அம்மா ஆட்சியும் பறந்துவிடும் என பூங்கோதை ஆலடி அருணா கூற, அதற்கு எப்போதும் எங்கள் மம்மி ஆட்சிதான் தொடரும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. எப்போதும் பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுவது வழக்கம். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்ததால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
இதனால் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 1-ஆம் தேதி முதல் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது. இந்த நிலையில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை ஒவ்வொரு துறை மீது மானிய கோரிக்கை குறித்த விவாதம் நடந்து வருகிறது.
அதுபோல் இன்றும் சட்டசபை கூடியது. அப்போது திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா பேசுகையில் நீட் தேர்வால் சமூக நீதி மறுக்கப்பட்டுள்ளது. தனியார் பயிற்சி மையங்கள் பணம் சம்பாதிக்க கொண்டு வரப்பட்ட தேர்வு.
ஆடிக்காற்றில் அம்மிக்கல்லோடு சேர்ந்து அம்மா ஆட்சியும் பறந்து போய்விடும் என்றார் பூங்கோதை. அப்போது அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் பழைய பழமொழிகள் இக்காலத்திற்கு பொருந்தவே பொருந்தாது. எப்போதும் எங்கள் மம்மி ஆட்சிதான் தொடரும் என ஜெயக்குமார் பதிலடி கொடுத்தார்.