தேர்தல் ஆணையத்துக்கே தேர்தல் நடத்திடலாமா.. அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்
சென்னை: தேர்தல் ஆணையத்துக்கும் தேர்தல் வைக்க வேண்டும் போல் உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக கூறினார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள டுமீல் குப்பம் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் அந்த பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதியை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார் மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மாற்று ஏற்பாடுகளை அரசு உடனடியாக செய்து கொடுக்கும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருப்பதால் நிவாரணப் பொருட்கள் வழங்குவது குறித்து ஆலோசனைகள் மேற்கொண்டு வழங்கப்படும்.
தேர்தல் வைக்க வேண்டும்
இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குள் நடைபெறும் விஷயங்களுக்குள் அரசியல் கட்சிகள் தலையிட முடியாது. ஆனால் காமெடியாக சொல்ல வேண்டும் என்றால் தேர்தல் ஆணையத்திற்கும் தேர்தல் வைக்க வேண்டும் போல் உள்ளது.
சரியான ஒன்றல்ல
அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களை நம்பி இருக்க வேண்டும். மதங்களை நம்பி இருக்கக் கூடாது. மக்களுக்கு தேவையான விஷயங்களை சொல்லாமல் மதத்தை வைத்து அரசியல் செய்வது சரியான ஒன்றல்ல.
ஆசை
திமுக தலைவர் ஸ்டாலின் பதவி மேனியாவில் உள்ளார். டிடிவி தினகரன் பதவி மேனியா மற்றும் பணம் மேனியா மீது ஆசையாக உள்ளார். கமல் வரலாற்றாசிரியர் போல் பேசி வருகிறார்.
பருவமழை
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததன் காரணமாகவே ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனினும் அரசு இதனை முன்கூட்டியே கணக்கிலிட்டு குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான சாதுரியமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
சமாளிப்பதற்கு
சென்னையை பொருத்தவரை குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கிறது. இந்த கோடையை சமாளிப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்றார் ஜெயக்குமார்.