திமுக பேரணிக்கு வந்தவர்களை விட போலீஸார் கூட்டம்தான் ஜாஸ்தியாம்.. அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்
சென்னை: திமுக, கூட்டணி கட்சிகள் நடத்திய சென்னை பேரணியில் 5 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டது அக்கட்சிக்கு மிகப் பெரிய அசிங்கம் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் சென்னை எழும்பூர் அருகே பேரணி நடத்தின. இந்த பேரணியில் திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, ப சிதம்பரம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தால் சென்னையே குலுங்கியது. டெல்லியே அதிர்ந்தது என ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டிருந்தார். இந்த நிலையில் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை வண்ணாரப்பேட்டையில் அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் 108 அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தும் 5000 பேருக்கு மேல் திமுக நடத்திய பேரணியில் கூட்டம் கூடவில்லை. தமிழக அரசு எடுத்திருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் திமுக பேரணியில் வன்முறையும் ஏற்படவில்லை. பேரணிக்கு கூடிய கூட்டத்தை விட போலீஸ்காரர்கள் கூட்டம்தான் அதிகமாக இருந்தது என்றார்.
சமூகவலைதளங்களில் பெரியார் குறித்து தமிழக பாஜக கொச்சைப்படுத்தியது குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் பதில் அளித்தார். அவர் கூறுகையில் சமூக சிந்தனைக்காக வாழ்ந்த பெரியாரின் வாழ்க்கையை யார் கொச்சைப்படுத்தினாலும் அது தவறுதான் என்றார்.