நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- குழப்பும் ஜெயக்குமார்!
சென்னை: நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சனம் செய்து தம்பிதுரை பேசியது தவறல்ல என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது ஜிஎஸ்டி குறித்து நாடாளுமன்றத்தில் தம்பிதுரை பேசியது தனிப்பட்ட கருத்தா இல்லை அரசின் கருத்தா என திமுக எம்எல்ஏ பொன்முடி கேள்வி எழுப்பினார்.
அப்போது அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளிக்கையில் நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சனம் செய்து தம்பிதுரை பேசியது தவறல்ல. ஒரு திட்டத்தால் மாநில அரசு பாதிக்கப்படும்போது அதை கேள்வி கேட்பதில் தவறில்லை என்றார்.
சபாநாயகர்
மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் அதிமுக சார்பில் மூத்த உறுப்பினரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசினார்.
வித்தியாசம்
அப்போது பேசிய அவர் மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் ஜிஎஸ்டி குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். தம்பிதுரை பேசுகையில் " மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
கூட்டாட்சி தத்துவமா
ஜிஎஸ்டி மூலம் மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துவிட்டது. ஜிஎஸ்டி வரி வசூலில் தங்கள் பங்கைப் பெறுவதற்கு, மத்திய அரசிடம் மாநில அரசுகள் பிச்சையெடுக்கும் நிலை உள்ளது. மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை முறையாக மத்திய அரசு அளிக்கவில்லை. இதுதான் கூட்டாட்சி தத்துவமா?
குற்றச்சாட்டு
புயல்களால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண நிதி முழுமையாக வழங்கப்படவில்லை. வாக்கெடுப்புகளில் மத்திய அரசு மீது நம்பிக்கை வைத்து பலமுறை வாக்களித்தோம். ஆனால் எங்கள் அரசு மீது மத்திய அரசு நம்பிக்கை வைக்கவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.