பாஜக தலைவர்களை விமர்சிக்கும் தம்பிதுரையின் கருத்து அதிமுகவின் கருத்தல்ல- அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: பாஜக தலைவர்களை விமர்சிக்கும் தம்பிதுரையின் கருத்து அதிமுகவின் கருத்தல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்காது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கருத்து தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தம்பிதுரையின் கருத்து அதிமுகவின் கருத்தல்ல என தெரிவித்திருந்தார்.
வாய்மூடி மௌனி
இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் முன்பு நேற்று ஆஜரான தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது. பாஜக தலைவர்கள் தமிழக அரசை விமர்சிக்கும் போது வாய்மூடி மௌனியாக இருக்க முடியாது.
பாஜகவை விமர்சிக்கும் தம்பிதுரை
எங்கள் கட்சி குறித்து கருத்து சொல்ல தமிழிசைக்கு யார் உரிமை கொடுத்தது? என்றார் தம்பிதுரை. இது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் பாஜகவை விமர்சிக்கும் தம்பிதுரையின் கருத்து அதிமுகவின் கருத்தல்ல.
அன்னப்பறவை
கட்சி, ஆட்சி பற்றி நான் கூறினாலும் ஒரு வட்டத்தைத் தாண்டி என்னால் கூற முடியாது. அதிமுக அனைத்துக்கும் ஜால்ரா அடிக்காது. அன்னப்பறவை போல் பிரித்து பார்க்கும்.
எதிர்ப்பு
எதிர்க்க வேண்டியதை எதிர்ப்போம், ஆதரிக்க வேண்டியதை ஆதரிப்போம். பாஜகவுடன் அதிமுக கூட்டணி என்ற கருத்தும் அத்வாலேவின் கருத்துதானே ஒழிய அது பாஜகவின் கருத்து அல்ல. தற்போது எந்த கட்சியுடனும் அதிமுக கூட்டணி இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.