தமிழகத்தில் இருப்பது தண்ணீர் பஞ்சம் இல்லை.. பற்றாக்குறை.. அமைச்சர் ஜெயக்குமாரின் அடடே விளக்கம்
சென்னை: தமிழகத்தில் இருப்பது தண்ணீர் பஞ்சம் இல்லை. பற்றாக்குறைதான் நிலவுகிறது என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வறட்சி மற்றும் மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் சென்னை உள்பட பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.
இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு உச்சபட்சத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் தண்ணீர் பிரச்சினை தீர மழை வேண்டி அதிமுக ஒரு புறம் யாகம் நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசு
மறுபுறம் திமுகவினர் தண்ணீர் பிரச்சினையை தீர்க்காத மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.
ஆர்ப்பாட்டம்
இதனால் வேலூர் மக்களுக்கு தண்ணீர் பிரச்சினை ஏற்படும் என திமுக பொருளாளர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில் இன்று ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தண்ணீர் பற்றாக்குறை
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை. தண்ணீர் பற்றாக்குறைதான் நிலவுகிறது. மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக தண்ணீர் பிரச்சினைக்காக போராட்டங்களை நடத்துகின்றன.
வேலூர் மக்களுக்கு
திமுகவின் போராட்டம் மக்கள் மத்தியில் எடுபடாது. வேலூர் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் எடுத்து வரப்படும் என்றார் ஜெயக்குமார்.