ஆக.. இனிமேல் காஷ்மீரிலும் திமுகவினர் சொத்து வாங்கி குவிப்பாங்க.. ஜெயக்குமார் செம நக்கல்!
சென்னை: இனி காஷ்மீரிலும் திமுகவினர் சொத்து வாங்கி குவிப்பார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370வது சட்டப்பிரிவினை ரத்து செய்து மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியது. இதற்கு நாடாளுமன்றத்திலேயே திமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. திமுக எம்பிக்கள் அன்றைக்கு மிக ஆவேசமாக பேசினார்கள். திமுக தலைவர் முக ஸ்டாலின் காஷ்மீர் விவகாரம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதனை விமர்சித்து சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், " அரசியல் சாசன பிரிவு 370 ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது பெரும்பான்மையான மக்களின் எண்ணம். அதைத்தான் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து, இனி திமுகவினர் அங்கு சொத்துக்களை வாங்கி குவிப்பார்கள். ஆனால், வெளி வேஷத்துக்குத்தான் திமுக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது" என்றார்.
முதல்முறையாக ஜெயலலிதா வழியில் அதிரடிக்கு மாறிய முதல்வர் பழனிச்சாமி.. சிக்கிய மணிகண்டன்
மணிகண்டனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியது குறித்த கேள்விக்கு, அது முதல்வரின் அதிகாரத்திற்குட்பட்ட முடிவு என்றும், மணிகண்டனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதற்கான காரணம் தனக்கு தெரியாது என்றும் ஜெயக்குமார் கூறினார்.