செய்தியாளர் கூட்டம்... திடீரென தொழுகையில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார்... காரணம் என்ன?
சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டு இருந்தபோது, அமைச்சர் ஜெயக்குமார் திடீரென தொழுகையில் ஈடுபட்டார். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் அமைதி ஏற்பட்டது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் புதிய அங்கன்வாடி மையத்தை அமைச்சர் ஜெயக்குமார் இன்று திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அருகில் இருக்கும் மசூதியில் பாங்கு ஒலித்தது. உடனே தொழுகையில் ஜெயக்குமார் ஈடுபட்டார். இதனால் அந்த இடம் சில விநாடிகள் அமைதியானது.
பின்னர் பேசத் துவங்கிய ஜெயக்குமார், ''காவிரி பிரச்னைக்கு யார் காரணம்? அதற்குக் காரணம் திமுகதான். 17 வருடங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும் விவசாயிகளின் நலனில் திமுக அக்கறை காட்டவில்லை.
மேலும், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மசோதாவை தமிழக அரசு ஒரு போதும் ஏற்காது. விவசாய மசோதாவைப் பொருத்தவரை முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கை தான் கட்சியின் நிலைப்பாடும்.
நாங்கள் அனைவரும் ஜெயலலிதா அவர்களால்தான் அமைச்சர்கள் ஆனோம். பிரேமலதா விஜயகாந்த் அவரது கட்சிப் பணிகளை மட்டும் கவனித்தால் போதும்'' என்றார்.