தினகரன், திமுக.. இரண்டும் எடுபடாத பிராண்டுகள்.. ஒரு புண்ணியமும் இல்லை.. ஜெயக்குமார் தாக்கு
செந்தில் பாலாஜி, டிடிவி தினகரனை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்
சென்னை: "தினகரன் ஒரு எடுபடாத பிராண்டு, திமுக ஒரு எடுபடாத பிராண்டு. இந்த இரண்டாலும் ஒரு புண்ணியமும் இல்லை" என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் தன்னை இணைத்து கொண்டார். தமிழக அரசியலில் மிக முக்கிய நிகழ்வாக இது பார்க்கப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
பழைய வண்ணாரப்பேட்டையில் புதிதாக ரூ.2 கோடி செலவில் கட்டப்படும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னதாவது:
வாய்ப்பே இல்லை
செந்தில் பாலாஜி திமுகவில் இணைவது என்பது திமுகவின் பலவீனத்தைதான் காட்டுகிறது. அவர் ஏற்கனவே திமுகவில் இருந்து வந்தவர் தான். உண்மையான அதிமுக இரத்தம் உள்ளவர்கள் திமுகவில் இணைய வாய்ப்பே கிடையாது.
[செந்தில் பாலாஜி எனக்கு நல்ல தம்பி.. எங்கிருந்தாலும் வாழ்க.. வாழ்த்துகிறார் தினகரன்]
கரையும் பெருங்காயம்
இவர் திமுக மீது உள்ள பழைய பாசத்தினாலே அங்கு போகிறார். அதிமுகவில் இணைவது என்பது கடலில் கரைக்கும் பெருங்காயம் போலதான். அதனால் எந்த பயனும் இல்லை.
ஒருநாள் நட்சத்திரம்
திமுகவை நோக்கி செல்பவர்கள் ஒரு நாள் நட்சத்திரமாக தான் இருக்க முடியும். ஆனால் அவருடன் இருந்த பலர் இன்னமும் அதிமுகவில்தான் இருக்கிறார்கள். அதனால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. தினகரன் ஒரு எடுபடாத பிராண்டு, திமுக ஒரு எடுபடாத பிராண்டு. இந்த இரண்டாலும் ஒரு புண்ணியமும் இல்லை" என்றார்.
230 ஓல்ட்
அமமுக-வை சீண்டுவது உயர் அழுத்த மின்சாரத்தை சீண்டுவது போன்றது என்ற தினகரனின் கருத்து குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக சீராக இயங்கும் 230 வோல்ட் ஆகும். எனவே 230 ஓல்ட் மட்டுமே பயன்படுத்த பாதுகாப்பான ஒன்று.
ஆபத்தானது
டிடிவி யாருக்கும் பயன்படாத ஹை வோல்ட். மேலும் தினகரன் தானே அவர் பயங்கரமானவர் என்பதை அவரே ஒத்துக் கொண்டுள்ளார். ‘ஹை வோல்டேஜ்' மின்கம்பி என்றால் அது அவருக்கே ஆபத்தானது" என்றார்.