கோரிக்கையை ஏற்க முடியாது.. உடனே பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை பாயும்.. அமைச்சர்
Recommended Video
சென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை ஏற்க முடியாது. உடனே பணிக்கு திரும்பாவிட்டால் துறை ரீதியான நடவடிக்கை பாயும் என தமிழக பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, 2004-இல் ரத்து செய்யப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரபரப்பு அறிக்கை
இதனால் கல்வியும் அரசு பணிகளும் வெகுவாக பாதிப்படைந்துள்ளன. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ரத்து
அந்த அறிக்கையில் அவர் கூறுகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வோம் என ஜெயலலிதா கூறவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த சாத்தியக் கூறுகள் உள்ளதா என ஆராயப்படும் என்றுதான் ஜெயலலிதா கூறினார்.
அதிக ஊதியம்
மேற்கு வங்க மாநிலத்தைத் தவிர மத்திய அரசும் பிற மாநிலங்களும் புதிய ஓய்வூதிய திட்டத்தையே பின்பற்றுகின்றன. எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த இயலாது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களை விட அதிக ஊதியம் பெறுகின்றனர் என்பதை உணர வேண்டும்.
துறை ரீதியான நடவடிக்கை
கல்விக்கும் பணிக்கும் இடையூறு போராட்டங்கள் நடத்துவதை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள். இல்லாவிட்டால் பணிக்கு செல்லாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
நிதியில்லாமல் போகும்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவது சாத்தியமில்லை. அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களும் நிதியை செலவிட்டு விட்டால் மக்கள் திட்டங்களுக்கு நிதியில்லாமல் போகும் என்றார் ஜெயக்குமார்.