அச்சுறுத்துவதற்கு நாங்க பயங்கரவாதிகள் அல்ல.. ஜாக்டோ ஜியோதான் அரசை அச்சுறுத்துகிறது- அமைச்சர் பொளேர்
Recommended Video
சென்னை: அச்சுறுத்துவதற்கு நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் ஜாக்டோ ஜியோதான் அரசை அச்சுறுத்துகிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, 2004-இல் ரத்து செய்யப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாயும்
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பணிக்குத் திரும்ப வேண்டும். அவ்வாறு பணிக்குத் திரும்பாவிட்டால் துறை ரீதியான நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்தார்.
புதிய கோரிக்கை
மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதுகுறித்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூறுகையில் அமைச்சர் ஜெயக்குமார் எங்களை அச்சுறுத்துகிறார். நாங்கள் எந்த புதிய கோரிக்கைகளையும் கேட்கவில்லை.
திட்டவட்டம்
ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தைத்தான் அமல்படுத்த கோருகிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேற்றினால் மட்டுமே ஸ்டிரைக் வாபஸ் பெறப்படும் என்று நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
நடவடிக்கை
நிர்வாகிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அடம்பிடித்தால் நடவடிக்கை பாயும்.
அச்சுறுத்தல்
அரசு ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் அச்சுறுத்துவதற்கு நாங்கள் பயங்கரவாதி அல்ல. மிகப் பெரிய சக்தி என அரசு ஊழியர்கள்தான் தமிழக அரசை அச்சுறுத்துகின்றனர் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.