பைக்கில் வந்து ஸ்பென்சர் சிக்னலில் கெத்து காட்டிய அமைச்சர் ஜெயக்குமார்...செல்பி எடுத்த மக்கள்
ஹெல்மெட் போட்டுக்கொண்டு அண்ணாசாலையில் பைக்கில் வலம் வந்தார் அமைச்சர் ஜெயக்குமார். ஸ்பென்சர் சிக்னலில் அமைச்சரை பார்த்த பலரும் ஓடி வந்து செல்பி எடுத்தனர்.
சென்னை: பரபரப்பாக காணப்படும் அண்ணாசாலையில் வெள்ளை சட்டையும் அதிமுக கரை வேட்டியுடனும் பைக்கில் வலம் வந்து கெத்து காட்டியுள்ளார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். திடீரென அமைச்சரைப் சிக்னலில் பார்த்த பொதுமக்கள் சிலர் ஆர்வத்துடன் ஓடி வந்து செல்பி எடுத்தனர். இருசக்கர வாகன ஹெல்மெட் போடுவதன் அவசியத்தை உணர்த்தவே பைக்கில் வலம் வந்ததாக கூறினார் அமைச்சர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி சென்னை அண்ணாசாலை. இரவும் பகலும் ஓயாமல் வாகனங்கள் செல்லும் சாலை தான் இது.காலை 11 மணி இருக்கும் வெள்ளை வேட்டி, சட்டை அதுவும் அதிமுக கரை வேட்டியுடன் பைக்கில் ஒருவர் ஹெல்மெட் அணிந்துகொண்டு வேகமாய் வந்து ஸ்பென்சர் சிக்னலில் நிற்கவே, அக்கம் பக்கத்தில் இருந்த வாகன ஓட்டிகள் இவர் யார் என்று சிறிய சந்தேகத்துடன் உற்று நோக்கினர்.
அவர்களைப் பார்த்து கையசைத்து சிரித்தார் அவர். அப்போது தான் அவர் அமைச்சர் ஜெயக்குமார் என்பது பலருக்கும் அடையாளம் தெரிந்தது. உடனே காரில் இருந்த சிலர் கீழே இறங்கினர். பைக்கில் இருந்த சிலரும் இறங்கி அவரை சூழ்ந்துகொண்டு செல்பி எடுத்துக் கொண்டனர்.
தலைக்கவசம் அவசியம்
என்ன சார் எங்கே போறீங்க?கார்ல ஏன் வரல? பைக்கில் வந்து இருக்கீங்களே" என்று பலரும் கேள்வி மேல் கேள்வி கேட்கவே, அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் சிரித்துக்கொண்டே பதிலளித்தார். ஹெல்மெட் என்பது மிக மிக அவசியம் இன்றைக்கு முகக்கவசம் எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ அதே போல தலைக்கவசம் எப்போதும் ரொம்ப முக்கியமானது அதை பலபேர் மறந்துட்டாங்க, இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு ரொம்ப அதிகமா இருக்கிறது என்றார் அமைச்சர்.
மக்களுக்கு விழிப்புணர்வு
இன்றைக்கு தனியார் ஹெல்மெட் கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகிட்டேன்.எனவே இளைஞர்களுக்கு ஒரு விழிப்புணர்வை கொடுப்பதற்காகத்தான் நான் ஹெல்மெட் போட்டு பைக்கில் சில கிலோமீட்டர் வலம் வருகிறேன் என்றார்.
வாழ்த்து கூறிய மக்கள்
ஒரு நாள் மட்டுமல்ல நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதேபோல ஹெல்மெட் அணிந்துகொண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க முடிவெடுத்திருக்கிறேன் என்றும் கூறினார் அமைச்சர். அவரது பதிலை கேட்டு அங்கு இருந்தவர்கள் அமைச்சருக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தனர்.
அமைச்சர் கெத்து
எப்போதுமே மக்களோடு மக்களாக பயணிக்கக்கூடிய அமைச்சர்களில் முதன்மையானவராக திகழ்பவர் ஜெயக்குமார். இந்த விஷயத்திலும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஹெல்மெட் அணிந்து பைக்கில் வலம் வந்து கெத்து காட்டியிருக்கிறார்.