ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா?, செல்லாதா?.. அமைச்சர் பதில்
சென்னை: ஏலம் மூலம் தேர்வு செய்யப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. வெறும் ஊராட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த தேர்தலில் மக்கள் யார் பக்கம் என்பதை அறிய அனைத்து கட்சிகள் தீவிரமாக தயாராகிறது. இதனிடையே உள்ளாட்சி தேர்தல் பதவிகள் ஏலம் விடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விசாரணை நடத்தி வருகின்றன. இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில் அதிமுக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை.
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்கள் குறித்து நாளை அறிவிக்கப்படும். உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லாது என்றார். அமைச்சரின் இந்த அறிவிப்பால் ஏலம் எடுத்தவர்கள் கலங்கி போய் உள்ளனர்.