விடுபட்டவர்களுக்கு பொங்கலுக்கு பிறகும் ரூ. 1000 வழங்கப்படுமாம்- அமைச்சர் தகவல்
சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்த பிறகும் விடுபட்டவர்களுக்கு ரூ. 1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, 2 அடி உயர கரும்பு, சிறிது முந்திரி- திராட்சை- ஏலக்காய் ஆகிய தொகுப்புடன் ரூ. 1000 பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் ரூ .1000 வழங்குவதற்கு கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை புதன்கிழமை வந்தது.
உயர்நீதிமன்றம்
அப்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கக் கூடாது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து வெள்ளை கார்டுதாரர்களுக்கு ரூ. 1000 மறுக்கப்பட்டதால் ரேஷன் கடைகளில் வாக்குவாதம் ஏற்பட்டது.
பெரும்பாலானோர்
சென்னையில் 19 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். 95 சதவீதம் கார்டுகளுக்கு பொருட்கள் மற்றும் ரூ.1000 வழங்கப்பட்டு விட்டன. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் 10-க்கும் குறைவானவர்கள்தான் பொங்கல் பொருட்கள் வாங்காமல் இருந்தனர். விடுபட்டவர்களில் பெரும்பாலான மக்கள் இன்று வாங்கினார்கள்.
வெறிச் சோடிய ரேஷன் கடைகள்
பொங்கல் பொருட்கள் பெரும்பாலும் வினியோகிக்கப்பட்டு விட்டதால் ரேஷன் கடைகளில் கூட்டம் இல்லை. பொதுமக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியூரில் இருந்து வர முடியாதவர்கள் மட்டும் பொங்கல் பொருட்கள் மற்றும் பரிசை வாங்கவில்லை.
பொங்கல் முடிந்த பிறகும்
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 97 சதவீதம் வரை பொங்கல் பரிசு 1,000 மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டுவிட்டதாகவும், விடுபட்டவர்களுக்கு பொங்கல் முடிந்த பின்னரும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.