இன்னும் 45 நாள் பொறுத்துக்கங்க... வெங்காயம் விலை குறைஞ்சிடும்- அமைச்சர் காமராஜ்
Recommended Video
சென்னை: இன்னும் 45 நாட்களில் வெங்காயம் விலை முழுவதும் குறைந்து கட்டுக்குள் வந்துவிடும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
வெங்காய விலை உயர்வு நிரந்தரமானது கிடையாது என்றும், ஆகையால் மக்களை வெங்காய விலையை நினைத்து கவலைப்பட வேண்டாம் என்றும் அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
மேலும், வெங்காயத்தை இறக்குமதி செய்ய தமிழக அரசு போதிய நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
ராக்கெட் வேகம்
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை ராக்கெட் வேகத்தில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வெங்காயம் வாங்குவதையே தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் வெங்காய விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
விலை குறையும்
வெங்காயம் விலை உயர்வு தொடராது என்றும், போதிய அளவு இறக்குமதி செய்தபின்பும், விளைச்சல் அதிகரித்த பின்பும் பழைய நிலைக்கு வெங்காயத்தின் விலை சென்று விடும் எனவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மேலும், தான் கேட்டுக்கொள்வதெல்லாம் மக்கள் இன்னும் ஒரு 45 நாட்கள் மட்டும் பொறுமை காக்க வேண்டும் என்பது தான் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இறக்குமதி
வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்ட பின்பு தமிழக அரசு மூலம் மலிவு விலையில் விற்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இதனிடையே சென்னையில் உள்ள ஒரு சில உணவகங்களில் ஆம்லெட்களில் வெங்காயத்திற்கு பதில் முட்டைக்கோஸ்களை சீவி அதில் சேர்க்கப்படும் நிகழ்வும் நடக்கிறது.
உற்பத்தி பாதிப்பு
மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக், கர்நாடகாவில் பெய்த கனமழையால் வெங்காயம் விளைச்சல் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துருக்கி, எகிப்து போன்ற நாடுகளில் இருந்து 10 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.