ரேஷன் அரிசி விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை... அமைச்சர் காமராஜ் திட்டவட்டம்
சென்னை: தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைகளுக்கான அரிசி அளவு குறைக்கப்பட்டதாக வெளியாகிய தகவலை அமைச்சர் காமராஜ் அடியோடு மறுத்துள்ளார்.
தமிழகத்தில் 35 ஆயிரத்து 253 நியாயவிலைக்கடைகள் குடிமைப் பொருள் வழங்கல் கழகம் மூலம் நடத்தப்படுகின்றன. இவற்றில் 9 ஆயிரம் கடைகள் பகுதிநேரக் கடைகளாக இயக்கப்படுகின்றன. குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பொருட்கள் நிர்ணயிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதுவரை ஒரு நபர் குடும்ப அட்டைக்கு 12 கிலோ வழங்கப்பட்டு வந்த அரிசி 7 கிலோவாகவும், இரண்டு நபர் குடும்ப அட்டைதார்களுக்கு 16 கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 12 கிலோவாக குறைக்கப்பட்டதாக இன்று காலை தகவல் வெளியாகியது. ஆனால் இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், ரேஷன் அரிசி விநியோகத்தை பொறுத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பான விரிவான விளக்கத்தை பெற குடிமைப் பொருள் வழங்கல் கழக அதிகாரிகளை நாம் தொடர்பு கொண்டு பேசிய போது, அரிசி அளவு குறைக்கப்படவில்லை என்றும் யாரோ சிலர் விசாரிக்காமல் தவறான செய்தியை பரப்பியுள்ளார்கள் எனவும் வேதனை தெரிவித்தனர். ஊரடங்கு காரணமாக அரிசியின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர குறைக்கப்படவில்லை என அவர்கள் உறுதியளித்தனர்.
கொரோனா களப்பணியில் தன்னார்வலர்கள்.. ஊக்கம் அளிக்க ஊக்கத் தொகை வழங்கும் தமிழக அரசு
இதனிடையே தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடி குடும்ப அட்டைதாரர்கள் இருக்கும் நிலையில், ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மட்டும் முதற்கட்டமாக அமல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.