கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி; மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு.. அமைச்சர் மா.சு. ஆட்சேபனை
சென்னை: கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார்
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மேம்படுத்தப்பட்ட முதுகலை மருத்துவ படிப்பிற்கான மையத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.
மேலும் அவர் தொடர்ந்து கூறியதாவது;
''ஒன்றிய மருத்துவத் துறை அமைச்சர் ஒரு தகவலை சொல்லி உள்ளார். விரைவில் இந்தியாவில் இருந்து தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படும் என கூறி உள்ளார். தடுப்பூசி மட்டும் தான் கொரோனவிற்கு தீர்வு என்று இருக்கிறது. இந்நிலையில் நமக்கே போதாத சூழ்நிலையில் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. தற்போது மூன்றில் ஒரு பகுதி தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.''
''18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி என்பது இன்னும் திட்டமிடல் இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் ஏற்றுமதி என்பது ஏற்று கொள்ள முடியாது. ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் முதலில் நாட்டிற்கு தேவையான அளவு தடுப்பூசிகளை வழங்கிய பிறகு ஏற்றுமதி செய்து கொள்ளட்டும்.''
''நீட் நுழைவு தேர்விலிருந்து விலக்கு கோரிய மசோதா தமிழக புதிய ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அதற்கு ஒப்புதல் கிடைக்கும். அதைத்தொடர்ந்து இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பப்படும்.'' இவ்வாறு மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
இதனிடையே இந்தியாவில் செலுத்தப்பட்டு வரும் கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் மருந்து நிறுவனமும் கோவேக்சின் தடுப்பூசியை ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசி பிரிட்டனின் ஆஸ்ட்ராஜெனிக்கா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கண்டுபிடிப்பாகும்.
இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்ததால் ஏப்ரல் மாதம் முதலே தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. இதனிடையே அடுத்த மாதம் முதல் இந்தியாவிலிருந்து தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்திருக்கிறார். இதற்கு தான் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள 50 நாடுகளுக்கு இந்தியா சார்பில் தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.