தமிழகத்தில் செப்டம்பரில் 3ஆம் அலை? சிறார்களை காக்க என்ன நடவடிக்கை.. அமைச்சர் மா.சு தரும் விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் அலை செப்டம்பர் மாதம் மத்தியில் உச்சமடைய வாய்ப்புள்ளதாக ஐஐடி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள மாநிலத்தில் தேவையான மருத்துவ கட்டமைப்புகள் தயாராக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்
உலக தாய் பால் வார விழாவை முன்னிட்டு சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட தாய் பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியாவில் நவம்பரில் கொரோனா 3-வது அலை உச்சம் பெறும்.. ஆய்வில் பரபரப்பு தகவல்.. ஷாக் ரிப்போர்ட்!
இதில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தாய்ப்பால் வங்கி
சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாய்ப்பால் வங்கியை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், "தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டு முடிவதற்குள் 7 மருத்துவக் கல்லூரி மற்றும் 5 மாவட்ட மருத்துவமனை என மொத்தம் 13 இடங்களில் தாய்ப்பால் வங்கி அமைக்கப்படும்.
கொரோனா 3ஆம் அலை
செப்டம்பர் மாதம் மத்தியில் தமிழ்நாட்டில் கொரானோ 3ஆம் அலை உச்சம் தொட வாய்ப்புள்ளதாகவும் அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு 42,000 வரை செல்லக்கூடும் என ஐஐடி ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐஐடி ,எய்ம்ஸ் உட்பட அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளும் கேட்கப்பட்டு தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எல்லைகளில் கண்காணிப்பு
தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஏற்படும் நோய்ப் பாதிப்புகளுக்கு ஏற்ப, அந்தந்த மாநில எல்லைப் பகுதிகளில் தேவைப்பட்டால் கூடுதலாகக் கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழ்நாட்டில் கொரோனா எதிர்ப்புச் சக்தி (ஆன்டிபாடிகள்) குறைவாக உள்ள மாவட்டங்களுக்குக் கூடுதலாகத் தடுப்பூசி வழங்கப்படும். தமிழ்நாட்டில் இப்போது 12.5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.
சிறார்களுக்கு சிறப்பு வார்டு
மேலும், உருமாறிய கொரோனா வைரஸ் குறித்துக் கண்டறியத் தமிழ்நாட்டில் இரண்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளது. இதுவரை மாநிலத்தில் 32 பேருக்கு டெல்டா கொரோனாவும் 10 பேருக்கு டெல்டா + வகை கொரோனாவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளக் குழந்தைகளுக்குச் சிறப்பு வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டுகளும் தயார் நிலையில் உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.