கொரோனா தடுப்பூசி... 67% பேருக்கு முதல் டோஸ்... 25% பேருக்கு 2-வது டோஸ்... அமைச்சர் மா.சு. தகவல்..!
சென்னை: தமிழகத்தில் 67% பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் 25% பேருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தை பொறுத்தவரை இன்றைய நிலவரப்படி 53 லட்சத்து 64 ஆயிரத்து 679 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாகவும் வேலை நாட்களிலும் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க சுகாதாரத்துறை சார்பில் துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
முதலமைச்சரின் அறிவுறுத்தல் படி நடத்தப்பட்டு வரும் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் பல லட்சம் பேர் பயன் அடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள 12,500 ஊராட்சித் தலைவர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுத இருப்பதாக கூறிய அமைச்சர் மா.சு., அனைத்து ஊராட்சிகளிலும் 100% தடுப்பூசி இலக்கை அடைவதற்கு அறிவுறுத்த உள்ளதாக கூறினார்.
முதல் டோஸ் செலுத்திக்கொண்டு 84 நாட்கள் கழித்து கோவிஷீல்டு தடுப்பூசியையும், 28 நாட்கள் கழித்து கோவேக்சின் தடுப்பூசியையும் மக்களின் இல்லங்களுக்கு அருகிலேயே செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார்.
இந்தாண்டு இறுதிக்குள் தமிழகத்தில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள முதல்வர் ஸ்டாலின், அதற்கேற்றவாறு நடவடிக்கைகளை வேகப்படுத்தி வருகிறார். சென்னையில் கொரோனா தடுப்பூசி முகாம்களை நேரில் ஆய்வு செய்திருக்கிறார்.
நாட்டிலேயே ஒரு முதலமைச்சர் கொரோனா தடுப்பூசி முகாமை நேரில் ஆய்வு செய்தது தமிழகத்தில் தான் முதல் முறையாக நடந்தது. திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற போது தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து புயல் வேகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளை முடுக்கிவிட்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது திரும்பிப் பார்க்கத் தக்கது.
Recommended Video
தற்போது தீபாவளி, கிறிஸ்துமஸ் என பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால், கொரோனா பரவல் இன்னும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதனால் அதற்குரிய தடுப்பு நடவடிக்கைகள் தமிழக அரசு தரப்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
காஷ்மீரில் வெளிமாநில மக்கள் மீது குறி வைத்து தாக்குதல்.. 2 வாரத்தில் 11 பேர் பலி.. பின்னணியில் பாக்?