ப்ளீஸ் அப்படி மட்டும் பண்ணாதீங்க.. அண்ணனாக கேட்கிறேன்.. சமுதாய வளைகாப்பில் அமைச்சர் மா.சு உருக்கம்
சென்னை: முழு வளர்ச்சி பெறும் முன்பு பிறந்த குழந்தைகளுக்குக் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், குறிப்பிட்ட தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என அறுவை சிகிச்சை மூலம் முன்கூட்டியே குழந்தையை எடுக்கக் கூடாது என்ற மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன், தென் சென்னை எம்பி தமிழ்ச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டார்.
வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!
இதில் ஆயிரம் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல், சேலையுடன் கூடிய சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார். கரு உருவான நாள் முதல் குழந்தை 2 வயதை எட்டும் வரையிலான 1000 நாட்களில் மழலைகளுக்கு ஏற்ற முறையில் தாய்மார்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு முறைகள் குறித்து விளக்கும் விதமாக உணவு, தானிய, காய்கறி வகைகளும் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், "சைதாப்பேட்டையை விடச் சிறிய தொகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்குச் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. ஆனால் இங்கு 100 கர்ப்பிணிகளுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. காரணம் இங்கு மண்டபம் சிறியதாக உள்ளதாக என்று அமைச்சர் கீதா ஜீவனிடம் அதிகாரிகள் தவறான தகவலைச் சொல்லியுள்ளனர். இனி வரும் காலங்களில் அதிகாரிகள் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது.
மாற்றுத்திறனாளிகள் உரிமை
தமிழகத்தின் அனைத்து மருத்துவமனையிலும் தாய்ப்பால் வங்கியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினராக இருந்தபோது மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து சட்டமன்றத்தில் நான் பேசினேன். எனது மகனும் மாற்றுத்திறனாளியாக இருந்ததால் நானே விருப்பப்பட்டு மாற்றுத்திறனாளிகள் குறித்து சட்டமன்றத்தில் பேசினேன்.
அண்ணனாகக் கேட்டுக்கொள்கிறேன்
நினைத்த நேரத்தில்தான் குழந்தை பிறக்க வேண்டும் என நினைப்பது தவறு. விரும்புபவரின் பிறந்த தேதி, வழிபடும் தெய்வம், மூதாதையர் நினைவாக நினைத்த நேரத்தில் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற தவறான மனநிலைக்குப் பலரும் சென்றுவிட்டார்கள். முழு வளர்ச்சி பெறும் முன்பு குழந்தை பெற்றால் குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும். குழந்தையின் வளர்ச்சியைக் கெடுத்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, திடகாத்திரமான குழந்தையாக இருக்காது. இயற்கையாக, சுகப் பிரசவத்தில் குழந்தை பிறக்கும் வகையில் நீங்கள் இருக்க வேண்டும் என உங்களின் அண்ணனாக இங்குக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
தாய்ப்பால் மட்டும்
அதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், "நிதி பிரச்சனையால் பல வீடுகளில் வளைகாப்பு நடப்பதில்லை. தாய் மகிழ்ந்தால் குழந்தையும் மகிழும். கர்ப்பிணிகள் அணிந்துள்ள வளையல் சத்தத்தை வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை ரசித்துக் கேட்கும். புட்டிப்பால் குடிக்கும் பிள்ளைகள் நோஞ்சானாகவே இருக்கும். குழந்தைக்கு 6 மாதம் தாய்ப்பால் மட்டும் கொடுக்க வேண்டும்.
ஆண் பெண் வேறுபாடு கூடாது
6 வயதுக்குள் 90 சதவீத மூளை வளர்ச்சி எட்டும் எனக் கூறப்படுகிறது. ஆணோ பெண்ணோ, எத்தனையாவது குழந்தையானாலும் சமமாகக் கருதி வளர்க்க வேண்டும். குழந்தைகள் இடையே கல்வி , உணவில் பாரபட்சம் காட்டக்கூடாது. பெண் பிள்ளையை மதிக்க ஆண் பிள்ளைக்கு கற்றுத் தர வேண்டும். கடவுள் கொடுத்த நேரத்தில் குழந்தை பிறந்தால்தான் ஜாதகம் சரியாக இருக்கும், நாள் நட்சத்திரம் பார்த்து முன் கூட்டியே அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர்க்க வேண்டும்" என்று கூறினார்.