கொரோனா வேக்சின் போட தயக்கம் காட்டும் அசைவ பிரியர்கள்.. தமிழக அரசு எடுத்துள்ள அதிமுக்கிய நடவடிக்கை
சென்னை: தடுப்பூசி செலுத்த அசைவ பிரியர்களும் மது பிரியர்களும் தயக்கம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்ரமணியன், இதனால் 6ஆவது மெகா தடுப்பூசி முகாம் அக். 23ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை பிராட்வே பகுதியில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் ஆய்வு செய்து பொதுமக்களிடம் சிகிச்சை முறை குறித்துக் கேட்டறிந்தனர்.
அப்போது நடமாடும் பல் மருத்துவமனை வாகனத்தையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சு தடுப்பூசி செலுத்த அசைவ பிரியர்களும் மது பிரியர்களும் தயக்கம் காட்டி வருவதாகத் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி... 67% பேருக்கு முதல் டோஸ்... 25% பேருக்கு 2-வது டோஸ்... அமைச்சர் மா.சு. தகவல்..!
மக்கள் தேடி மருத்துவம்
இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்ரமணியன் மேலும் கூறுகையில், "மக்கள் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சென்னையில் மக்களைத் தேடி பல் மருத்துவம் என்ற வகையில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை நடமாடும் பல் மருத்துவ வாகனம் தலைநகர் சென்னையைச் சுற்றி வர இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கும் இந்த சேவை மூலம் பொதுமக்களுக்குப் பல் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பல் மருத்துவமனை கல்லூரி கட்டுவதற்கு அனுமதி கிடைக்கப் பெற்றிருக்கிறது விரைவில் அங்குக் கட்டுமான பணி தொடங்க இருக்கிறது.
அசைவ பிரியர்கள்
மத்திய அரசு தற்போது தடுப்பூசியை விரைந்து கொடுக்க தொடங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் சுமார் 53 லட்சம் தடுப்பூசிகள் கை இருப்பில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ பிரியர்களும் மது பிரியர்களும் தடுப்பூசி செலுத்தத் தயங்குகிறார்கள். அசைவம் சாப்பிட்டால் தடுப்பூசி செலுத்தக் கூடாது என்ற தவறான கித்துளிடம் பரப்பப்பட்டுள்ளது. அதனால் இந்த வாரம் அக். 23ஆம் தேதி சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
6ஆவது மெகா தடுப்பூசி முகாம்
6ஆவது மெகா தடுப்பூசி முகாம் இந்த வாரம், அக்.23ஆம் தேதி சனிக்கிழமை 50 ஆயிரம் முகாம்களில் நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெரும்பாலான நபர்கள் தடுப்பூசி செலுத்தி விட்டார்கள். அதனால் தடுப்பூசி செலுத்தாதவர்களும் பயன்பெறும் வகையில் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது. இது ஒரு முயற்சிதான். இந்த முயற்சிக்குப் பலன் கொடுத்தால் தொடர்ந்து செயல்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாம்
தமிழ்நாட்டில் கடந்த செப். 12ஆம் தேதி நடைபெற்ற முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 28.91 லட்சம் பேர் தடுப்பூசி போடப்பட்டது. அதைத் தொடர்ந்து செப். 19, செப் 26, அக். 3 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் முறையே 16.43 லட்சம், 25.04 லட்சம், 17.19 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தமிழ்நாட்டில் முதலில் பொதுமக்களிடம் வேக்சின் தொடர்பாகச் சற்று தயக்கம் நிலவியது. இருப்பினும், 2ஆம் அலைக்குப் பிறகு, இந்த தயக்கம் பெருமளவு குறைந்துவிட்டது. பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வேக்சின் போட்டு வருகின்றனர். இதனால் மாநிலத்தில் வேக்சின் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் தான் 6ஆவது மெகா தடுப்பூசி முகாம் அக் 23 ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.