நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் எப்போது கிடைக்கும்? அமைச்சர் மா.சு அளித்த தகவல்
சென்னை: நீட் தேர்வில் ஆளுநர் ஒப்புதல் வாங்குவதில் கால தாமதம் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் மா. சுப்பிரமணியன், நீட் விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை போன்றோர் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் என்றும் சாடியுள்ளார்.
விடுதலை போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியாரின் 104-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோவில்களில் இனி 3 வேளையும் அன்னதானம் - தொடக்கி வைத்த முதல்வர்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "சமுதாய வளர்ச்சிக்கு திமுக என்றும் உறுதியாக உள்ளது. மிகவும் பின் தங்கிய சமூக மக்களின் உணர்வுகளை மதிக்கும் இயக்கம் திமுக. சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இது தான் திமுகவின் நிலைப்பாடு. திமுக என்றைக்கும் கூட்டணியை மதிக்கும் கட்சியாகவே இருந்துள்ளது. பா.ம.க அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது அவர்களது விருப்பம்" எனக் கூறினார்.
அமைச்சர் மாசு
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 364 மாணவர்களுக்கு மன நல ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது. 333 மனநல மருத்துவர்கள் மூலம் 38 மாவட்டங்களில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆலோசனை நடைபெற உள்ளது. 5000 மாணவர்களுக்கு நாளொன்றுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது. மனநல ஆலோசனை மிகச் சிறப்பாகச் சென்று கொண்டு இருக்கிறது. இந்த முயற்சி இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை
மக்களைத் தேடி மருத்துவம்
கடந்த மாதம் 5ஆம் தேதி மக்களைத் தேடி மருத்துவம் நிகழ்ச்சியை முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் நேற்று மட்டும் 32743 பயனாளிகளுக்கு மருந்துகளும் சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 4,93,544 பேர் பயன்பெற்று உள்ளனர். 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதி இருப்பதால் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைச் செயல்படுத்த மாநில தேர்தல் ஆணயத்திற்குக் கடிதம் எழுதவுள்ளோம்.
பொறுப்புடன் பேச வேண்டும்
நீட் விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை போன்றோர் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். நீட் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும், நீட் தேர்வில் ஆளுநர் ஒப்புதல் வாங்குவதில் கால தாமதம் ஏற்படவில்லை. பள்ளிகளில் 83 மாணவர்களுக்குத் தொற்று உறுதியானது உண்மை. அவர்கள் சிகிச்சையில் உள்ளனர்" என்றும் அவர் தெரிவித்தார்.
Recommended Video
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, " திமுக தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் எத்தனை மாணவர்களை அனுமதிக்கிறார்கள் என்பது குறித்தும் தைரியமிருந்தால் திமுக வெள்ளை அறிக்கையில் தெரிவிக்க வேண்டும். தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். அவர்கள் யாரும் எந்தக் குறையும் கூறவில்லை. ஆனால் திமுகவினர் செய்யும் அரசியல் காரணமாக மாணவர்கள் உயிரிழந்து இருக்கின்றனர். தமிழகத்தில் திமுகவினர் தலைகீழாக நின்றாலும் கூட நீட் தேர்வு நடக்கும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.