ஆட்டோமொபைல் துறையில் 5லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்.. அமைச்சர் அரசுக்கு முக்கிய வேண்டுகோள்
சென்னை: ஆட்டோமொபைல் விற்பனை வீழ்ச்சியால் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக வந்துள்ள செய்தியை குறிப்பிட்டு, மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கி அவர்களின் வேலையை மீட்க வேண்டும் என்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாகனங்களின் விற்பனை குறைந்துள்ளதால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தயாரிப்பைக் குறைத்துக்கொள்வது, பணியாளர்களுக்கு கட்டாய விடுமுறை அளிப்பது மற்றும் பணியில் இருந்து நீக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
மக்களிடையே பணப்புழக்கம் குறைந்திருப்பது, வாகனங்களுக்கான விலை உயர்வு, அதிகப்படியான சுங்கக்கட்டணம், வாடகைக்கார்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்ற காரணங்களாலும், இந்தியாவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை காரணமாகவும் ஆட்டோமொபைல் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உற்பத்தி செய்த வாகனங்கள் தேங்கியதால் அவற்றை வாங்கி விற்பனை செய்யம் டீலர்ஷிப் நிறுவனங்களை கடுமையாக பாதித்தன. இதனால் நிறைய வாகன விற்பனை ஷோரும்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Warning signal, especially for TN which has the highest concentration of Auto sector in India - Central Zgovt to act fast announcing fiscal and other incentives to save the jobs ! https://t.co/LuJMb7sBML
— Pandiarajan K (@mafoikprajan) August 18, 2019
இதேபோல் விற்பனையில் தொய்வு ஏற்பட்டதால் வாகனத்தை உற்பத்தி செய்வதையும் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் குறைந்துக்கொண்டுள்ளன. இதனால் பணியாளர்களுக்கு நிறுவனங்களில் கட்டாய விடுமுறை மற்றும் வேலையை விட்டு நீக்குவது உள்ளிட்ட செயல்களில் நிறுவனங்கள் இறங்கியுள்ளன.
இதன் காரணமாக இந்தியாவில் சுமார் 5லட்சம் பேர் ஆட்டோமொபைல் துறையில் வேலையை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். இதையடுத்து மத்திய அரசு இந்த விஷயத்தில தலையிட்டு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில் அதிபர்கள் தரப்பில் இருந்து பெரிய அளவில் கோரிக்கைகள் வரத்தொடங்கியுள்ளன.
இந்த சூழலில் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆட்டோமொபைல் விற்பனை வீழ்ச்சியால் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக வந்துள்ள செய்தியை குறிப்பிட்டு, இது ஒரு எச்சரிக்கை மணி, தமிழகம் ஆட்டோ மொபைல் துறை சார்ந்து இயங்குகிறது. மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கி அவர்களின் வேலையை மீட்க வேண்டும் என்று டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.