அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நடிகை விந்தியா அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர்கள்.. அதிரடி அறிவிப்பு
சென்னை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நடிகை விந்தியா ஆகியோர், அதிமுகவின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிர்வாக வசதிக்காக அதிமுகவில் அமைப்பு ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்களையும் நியமித்துள்ளது அதிமுக.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கூட இல்லாத நிலையில்,கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் அதிமுக தீவிரமாக களமிறங்கியுள்ளது.
கியரை மாற்றிய அதிமுக.. அமைப்பு ரீதியாக மாவட்ட பிரிப்பு! செயலாளர்கள் நியமனம்.. ஓபிஎஸ்-எடப்பாடி அதிரடி
முன்னாள் அமைச்சர்கள்
முன்னாள் அமைச்சர்கள் கருப்பசாமிபாண்டியன், இசக்கி சுப்பையா, சிவசாமி, புத்திச் சந்திரன், ரத்தினவேல், மருதராஜ், ராஜேந்திரன், திருத்தணி கோ.அரி, வாலாஜாபாத் பா.கணேசன், ஆசைமணி, சீனிவாசன் ஆகியோர் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய் மருத்துவர் அணி இணைச் செயலாளராகவும், முன்னாள் சட்டசபை உறுப்பினர் பாபு முருகவேல் சட்டப் பிரிவு இணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாஃபா பாண்டியராஜன்
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பாப்புலர் முத்தையா, நடிகை விந்தியா ஆகியோர் கொள்கை பரப்பு கொள்கை பரப்பு துணை செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நடிகை விந்தியாவுக்கான பதவி உயர்வு என்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, செயலாளராக வேடசந்தூர் தொகுதி எம்எல்ஏ, பரமசிவம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இணைந்து செயல்பட திட்டம்
பிற அமைச்சர்கள் பலருக்கும் மாவட்ட கழகச் செயலாளர் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், மாஃபா பாண்டியராஜன், ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக இருந்தவர். எனவே, ஓபிஎஸ்-எடப்பாடி அணிகள் இணைந்த பிறகு, செல்வாக்குமிக்க துறையில் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. ஆனால் அதை நிவர்த்தி செய்யும் விதமாக மாஃபா பாண்டியராஜனுக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
சசிகலா ரிலீஸ்
எனவே, வரும் சட்டசபை தேர்தலில், எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவில் முன்பு தனியாக செயல்பட்ட அணிகளை இணைத்து, அரவணைத்துச் செல்ல விரும்புவது தெளிவாக தெரிகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலா, சிறையிலிருந்து விடுதலையாக இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுகவை வலுப்படுத்தும் முயற்சிகளில் கட்சி தலைமை இறங்கியுள்ளது. அதன் ஒரு அங்கமாக இன்றைய அறிவிப்பு பார்க்கப்படுகிறது.