இல்லாததையும், பொல்லாததையும் ஸ்டாலின் கூறுகிறார்... மாஃபா பாண்டியராஜன் விமர்சனம்
சென்னை: குடியுரிமை சட்டம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லாததையும், பொல்லாததையும் கூறி பீதியை கிளப்பி வருவதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், குடியுரிமை சட்டத்தை கண்டித்து திமுக நடத்தும் கையெழுத்து இயக்கம் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் அவர் கூறினார்.குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் பிரச்சனை இல்லாதபோது அது பற்றி திமுக பொய்யான தகவல்களை பரப்புவது அர்த்தமற்ற செயல் என அமைச்சர் பாண்டியராஜன் விமர்சித்தார். குடியுரிமை சட்டம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் மிக தெளிவாக உண்மை நிலையை எடுத்துக்கூறியுள்ளார் என்றும் அவருக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.
குடியுரிமை சட்டம் விவகாரத்தில் தேவையில்லாத வேலையில் திமுக ஈடுபடுவதாகவும், இஸ்லாமியர்களிடம் உங்களை நாடு கடத்த முயற்சிக்கிறார்கள், அகதிகள் முகாமில் வைக்கப்போகிறார்கள் கூறுவதே தவறு என்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். இது போன்ற வதந்திகளை பரப்புவது சட்டப்படி குற்றம் என அவர் கூறினார். வதந்தியை செய்தியாக மாற்றி ஸ்டாலினும், உதயநிதியும் பரப்புகிறார்கள் என குற்றஞ்சாட்டினார். மக்களிடத்தில் பீதியை கிளப்பும் உத்தியாக தான் இதை தாம் பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
திருச்சி சிவாவுக்கு ஓய்வு கொடுக்க நினைக்கும் ஸ்டாலின்... புதுமுகத்திற்கு வாய்ப்பு
குடியுரிமை சட்டம் தொடர்பாக அவதூறு பரப்புவதும், கையெழுத்து இயக்கம் நடத்துவம் தடை செய்ய வேண்டிய ஒன்று என்றும், இல்லாததையும், பொல்லாததையும் கூறி ஒரு சமுதாய மக்களை தூண்டிவிட்டு அவர்களை கோபப்படுத்தும் பணிகளில் திமுக ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். குடியுரிமைக்கு எதிராக அவதூறு பரப்பும் செயலை மத்திய அரசு ஏன் அனுமதிக்கிறது என தனக்கு தெரியவில்லை எனவும் கூறினார். மு.க.ஸ்டாலின் செய்வது நியாயமா என்பதை அவரது மனசாட்சிக்கே தாம் விட்டுவிடுவதாக தெரிவித்தார்.