இப்படி கொச்சையாக பேசிவிட்டாரே.. பொது இடத்தில் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கனும்.. கடுகடுக்கும் மாஃபா
சென்னை: பாரம்பரியத்தில் வேரூன்றி இருக்கும் விஷயங்களை கொச்சையாக பேசும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொது இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் ம.ஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
சிபிஎஸ்இ பாடத் திட்டத்திற்கு நிகராக புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளை சந்திக்கக்கூடிய தகுதியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். இதற்காக ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்த் சந்திப்பு
ரஜினிகாந்த் திருமாவளவன் சந்திப்பை, அரசியலாக்க கூடாது. மகள் திருமண பத்திரிக்கை மட்டுமே அளித்து பழைய நண்பர்களை சந்தித்துள்ளனர். இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை.
நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலினின் ஆசை நிராசையாகும்.
அவருடைய ஆசைகள் எல்லாம் நிராசையாகவே நடந்து கொண்டிருப்பதால் அதில் இதுவும் ஒன்றாக இருக்கட்டும்.
துணிச்சல்
என்ன ஒரு துணிச்சல் இருந்தால் தமிழகத்தில் திருமண நிகழ்ச்சிகளை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்? அதை மறைப்பதற்காக இதுபோன்ற பல விஷயங்களை வெளியே கூறுகிறார். அவர் பேசுகின்ற பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கொண்டிருக்கின்றன. பாரம்பரியத்தில் வேரூன்றி இருக்கிற விஷயங்களை கொச்சையாக பேசிவரும் ஸ்டாலின், பொது இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்.
என்ன வேண்டுமானாலும் பேசக்கூடாது
கோவில்களிலும், திருமண நிகழ்ச்சிகளிலும் உச்சரிக்கும் மந்திரங்களை தவறாக புரிந்து கொண்டு, கொச்சையாக பேசி வரும் ஸ்டாலினுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன். இந்துமதத்தை என்னவேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை தற்போது கிடையாது. இதை ஸ்டாலின் உணர வேண்டும். மக்களின் நம்பிக்கையை பாதிக்கும் விஷயம் இது. எதோயோ பேசவேண்டும் என்பதற்காக பேசக்கூடாது.
ஓபிஎஸ் மகன்
ஓபிஎஸ் வாரிசு அரசியலை வளர்க்கவில்லை. கட்சியின் அடிப்படை உறுப்பினர் யாராக இருந்தாலும் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கலாம். குடும்ப பிடியில் கட்சி செல்லக் கூடாது என்பதற்காகவே மிகப்பெரிய இழப்பை சந்தித்து மீண்டும் திரும்ப வந்து கட்சியை வழி நடத்துபவர் ஓபிஎஸ். அவரைப் பார்த்து கேள்வி கேட்பது முறையல்ல. தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்க கூட ஓபிஎஸ் மகனுக்கு, உரிமை இல்லை என்று கூறுவது நியாயமில்லை. இதை வாரிசு அரசியல் நடத்தும் திமுக கூறுவதற்கு தகுதியில்லை.
பிரச்சார வியூகம்
வெகுவிரைவில் கூட்டணி சார்ந்த அறிவிப்புகள் வெளிவரும். பத்தாம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்குவதற்கு அவகாசம் இருப்பதாகவும் பலரும் ஆர்வமுடன் விண்ணப்பங்கள் வழங்கி வருகிறார்கள். ஆனால் எந்த கட்சிக்கும் இது போன்ற துணிச்சல் இல்லை. ஒருபக்கம் தேர்தல் அறிக்கையை தயாரிக்கிறோம், மற்றொருபுறம் தேர்தல் பிரச்சார வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இவற்றை இபிஎஸ் ஓபிஎஸ் இணைந்து வெளியிடும் போது தாக்கம் பெரியதாக இருக்கும். இவ்வாறு மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.