ஸ்டாலினுக்கு அந்த சிரமத்தை கொடுக்க மாட்டோம்.. நாங்களே பாத்துகறோம்.. மாஃபாவின் கலகல பதில்
சென்னை: சென்னையில் நேற்று புத்தக வெளியீட்டு விழாவில் திமுக எம்பி திருச்சி சிவாவுக்கு பதில் அளித்ததன் மூலம் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவையையே கலகலக்க வைத்தார்.
பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா எழுதிய புறநானூற்று புதிய வரிசை வகை நூல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திமுக எம்பி திருச்சி சிவா, மதுரை எம்பி வெங்கடேசன், ஹிமாசல் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராமசுப்பிரமணியன், நடிகர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் திருச்சி சிவா பேசுகையில் இந்த புறநானூற்று நூல் ஸ்டாலின் முதல்வரானதும் அனைத்து நூலகங்களிலும் வைக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். அதன் பிறகு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஸ்டாலினுக்கு அந்த சிரமத்தை நாங்கள் கொடுக்க மாட்டோம்.
எனது துறையின் கீழ் இயங்கும் நூலகங்களில் இந்த நூல் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார் மாஃபா பாண்டியராஜன். இதனால் அவையில் சிரிப்பொலி எழுந்தது.
இந்த விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், காலம் எப்போதும் பேசாது;ஆனால் காலம் தான் பதில் சொல்லும். சாலமன்பாப்பையா எழுதிய புறநானூறு புதிய வரிசை நூல், எப்படியோ மக்களுக்கு சென்று சேர்ந்தால் நல்லது. ராமாயணம் எழுதியதால் கம்பருக்கு பெருமை;புறநானூறு புதிய வரிசை நூலை எழுதியதால் சாலமனுக்கு பெருமை என்றார் ரஜினிகாந்த்.