ஜெயக்குமார் போல் முதல்வரால் செயல்பட முடியாது.. அவரின் செயல்பாடு ஊரறிந்தது.. மனோ தங்கராஜ் கிண்டல்!
சென்னை: ரிமோட் முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
பா.சிவந்தி ஆதித்தனாரின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் அவரது நினைவு இல்லத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து மனோ தங்கராஜ் கூறுகையில், என்றும் போற்றுதலுக்குரிய தலைவர் சிவந்தி ஆதித்தனார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.
படிக்கும்போதே புல்லட்டில் சென்றவர் ஈபிஎஸ்! ஆர்.எஸ்.பாரதி அப்படியா? ஜெயக்குமார் விமர்சனம்
மனோ தங்கராஜ் பதில்
தொடர்ந்து, கல் குவாரிகள் விவகாரம் தொடர்பாக விவாதிக்க தயாரா என்று பொன்.ராதாகிருஷ்ணன் விடுத்திருந்த சவால் குறித்து எழுப்பிய கேள்விக்கு, பொய்யை மீண்டும் மீண்டும் பேசுவதால் பொய் உண்மையாகிவிடாது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 39 குவாரிகளை அதிமுக மற்றும் பாஜக பிரமுகர்கள் இயக்கி வந்தனர். தற்போது அது 6ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எந்த நேரத்தில் எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
ஜெயக்குமாருக்கு பதிலடி
தொடர்ந்து ரிமோட் முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஜெயக்குமாரி மயக்கத்தில் மயக்கத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். நிச்சயம் ஜெயக்குமார் போல் முதல்வர் செயல்பட முடியாது. அவரின் செயல்பாடு ஊரறிந்த செயல்பாடு.
சமமான வளர்ச்சி
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக எப்படி செயல்பட வேண்டுமோ, அவ்வாறு செயல்பட்டு வருகிறார். திமுக அரசு இலக்கு நிர்ணயித்து வேகமாக முன்னேறி வருகிறது. தமிழக அரசு நகரம் முதல் கிராமம் வரை அனைத்து தரப்புக்குமான வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறது. சரிசமமான நீடித்த வளர்ச்சியை உருவாக்கி வருகிறோம் என்று தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் பேரணி
தொடர்ந்து ஆர்எஸ்எஸ் பேரணி பற்றி எழுப்பிய கேள்விக்கு, நீதிமன்றங்களில் சில நேரம் சில கருத்துகள் கூறுவார்கள். அதனைப்பற்றி கருத்து கூற விரும்பவில்லை. ஆனால் சட்டம் ஒழுங்கு எந்தவிதத்திலும் பாதிக்காமல் பார்க்க வேண்டிய கடமை திமுக அரசுக்கு இருக்கிறது. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனமாக பார்த்துக்கொள்வார்கள்.
பிரிவினை முயற்சி
மத அடிப்படையில் இப்படியான செயல்களை செய்வது தேவையில்லாத ஒன்று. உண்மையான ஆன்மீகம் பேசுகிறவர்கள் வெறுப்பை பேசக் கூடாது. அன்பை மட்டுமே பேச வேண்டும். ஆனால் ஆர்எஸ்எஸ் வெறுப்பை கக்கி வருகிறார்கள். அது பிரிவினையை ஏற்படுத்துவதற்காக முயற்சி. இதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பாக மேல் முறையீடு செய்வது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.