"தாக்கமே இருக்காது".. இன்னும் அரசியலுக்கே வரவில்லை.. அதற்குள் விஜய் பற்றி கமெண்ட் அடித்த அமைச்சர்!
சென்னை: நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தினர் உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட உள்ள நிலையில் தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ் இது குறித்து பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்காக கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகள் தனித்து போட்டியிடுவதால் பலமுனை போட்டி நிலவுகிறது. நடிகர் விஜயின் மக்கள் இயக்கமும் இந்த தேர்தலில் போட்டியிட உள்ளது. இதற்கான முடிவு கடந்த சனிக்கிழமை நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டு இருக்கிறது.
வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!
விஜய் நேரடியாக அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும் கூட்டத்தில் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மக்கள் இயக்கத்தின் கொடி, விஜய் புகைப்படங்களை பயன்படுத்தலாம். ஆனால் சுயேட்சையாகத்தான் போட்டியிட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பேட்டி
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் பேட்டி அளித்தார். அதில், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் என்பது திமுகவின் நான்கு மாத ஆட்சிக்கு மக்கள் கொடுக்கும் நன்மதிப்பாக இருக்கும். நான்கு மாதம் நாங்கள் சிறப்பாக ஆட்சி செய்து இருக்கிறோம். பல நலத்திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறோம். மக்கள் எங்கள் ஆட்சியை பாராட்டி வருகிறார்கள்.
பாராட்டு
இதற்கான சான்றிதழாக இந்த உள்ளாட்சி தேர்தல் வெற்றி அமைய போகிறது. திமுகதான் இதில் உறுதியாக வெல்லும். விஜய் உள்பட நடிகர்களின் அரசியல் வருகை தமிழ்நாட்டில் தோல்வியைத்தான் சந்தித்துள்ளது. நடிகர்கள் திமுக ஆட்சிக்கு எந்த விதமான சவாலையும் ஏற்படுத்த முடியாது. திமுக ஆட்சியின் போது நடிகர்களின் தாக்கம் எடுபடாது. திமுக வலுவான மக்கள் ஆட்சியை கொண்டு இருக்கிறது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி அளித்துள்ளார்.
தாக்கம்
விஜய் இன்னும் முழுமையாக அரசியலுக்கு வராத நிலையிலேயே அவரை பற்றி அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி அளித்துள்ளார். விஜய் இதுவரை உள்ளாட்சி தேர்தல் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை. அவரின் மக்கள் இயக்க நிர்வாகிகள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளனர். விஜய் இதில் வெளிப்படையாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடாத நிலையில் அமைச்சர் அதை பற்றி விமர்சனம் வைத்துள்ளார்.
திமுக
மற்ற அதிமுக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த எந்த தலைவர்களும் விஜயின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. இது ஆரம்ப கட்டம் என்பதால் பெரிதாக இதை பற்றி யாரும் கமெண்ட் செய்யவில்லை. ஆனால் முதல்முறையாக அமைச்சர் மனோ தங்கராஜ் இதை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இன்னொரு பக்கம் இன்று செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பேரணி நடத்தினார்கள்.
வாய்ப்பு இல்லை
உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்த வேட்பாளர்கள் ஒன்றாக சேர்ந்து சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். வரிசையாக மக்கள் இயக்கத்தின் விஜய் படம் பொறிக்கப்பட்ட வெள்ளை கொடியை ஏந்தி ரசிகர்கள் சென்றனர். பல்வேறு மாவட்டங்களில் விஜய் ரசிகர்கள் இன்றில் இருந்து வேட்பு மனு தாக்கல் செய்ய தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் எந்த விதமான பிரச்சாரத்திலும் ஈடுபட வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.